கொல்கத்தா, அக்.22- மேற்கு வங்கத்தில் துர்கா பூஜைக் கொண்டாட்டங்களில் அரசியல் கட்சிகளும் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் பங்கேற்கின்றன. இதில் புத்தக விற்பனை மையங்களை அமைப்பதும் ஒன்றாகும். 1952 ஆம் ஆண்டு முதல் துர்கா பூஜைக் கொண்டாட்டங்களின்போது புத்தக விற்பனைக் கடைகளை மாநிலம் முழுவதும் அமைப்பதை மார்க்சிஸ்ட் கட்சி வழக்கமாகக் கொண்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டு முதல் பாஜகவும் இதைச் செய்யத் தொடங்கியது. ஆனால், நிலையங்களை அமைக்கப்பட்ட நிலையில், “உங்கள் கட்சி சார்பாக எவ்வளவு கடைகள் போட்டிருக்கிறீர்கள்?” என்று நிருபர்கள் கேட்டபோது, “இன்னும் எண்ணிக்கையைக் கணக்கிடவில்லை” என்று சமாளித்தார் பாஜகவின் மேற்கு வங்கக் கட்சித் தலைவர் சுகந்தா மஜூம்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய புத்தக முகமையின் சார்பில் இந்த முறை 1,300 புத்தகக் கடைகள் போட்டிருக்கிறார்கள். கடந்த முறை 1,100 கடைகளைத் திறந்த இவர்கள் இந்த முறை கூடுதலாக 200 கடைகளை அமைத்திருக்கின்றனர். விற்பனையைப் பொறுத்தவரை, 2019 ஆம் ஆண்டில் இருந்ததைவிட இந்த முறை அதிகமாக ஆகும் என்கிறார் அந்த முகமையின் இயக்குநரான அனிருத்தா சக்கரவர்த்தி.
காத்திருக்கும் குழந்தைகள்
“போய் மேளா(BOI MELA)” என்றும் அழைக்கிறார்கள். தமிழில் புத்தகத் திருவிழா என்பதைத்தான், வங்க மொழியில் இப்படிச் சொல்கிறார்கள். மேற்கு வங்க மக்களும் இந்தக் காலகட்டத்தில் புத்தகங்களை வாங்கத் திட்டமிடுகிறார்கள். குழந்தைகள் சின்னச் சின்ன உண்டியல்களில் காசுகளைப் போட்டு வைத்து, துர்கா பூஜையின்போது புத்தகங்களை வாங்கக் காத்திருக்கிறார்கள்.
காந்தியின் 26 நாட்கள்
இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தபோது தேசியக் கொடியை ஏற்ற மகாத்மா காந்தி தில்லியில் இல்லை. இந்து-முஸ்லீம் கலவரங்கள் வெடித்து ரணகளமாகி இருந்ததால், அமைதியை ஏற்படுத்த அவர் வங்காளத்தில் இருந்தார். ஆகஸ்ட் 13, 1947 முதல் செப்டம்பர் 7, 1947 வரையில் பெலகாட்டாவில் உள்ள ஐதர் மன்ஜில் என்ற இல்லத்தில் தங்கியிருந்தார். ஏராளமான ரத்தம் சிந்திய இந்தக் காலகட்டத்தில் மிகவும் கொடியதாக இருந்தது. அவரது அந்த 26 நாட்கள் பற்றிய புத்தகத்தை அஞ்சன் பெரா என்ற இடது முன்னணியின் முன்னாள் மாநில அமைச்சர் எழுதியுள்ளார். இதுவும் பரபரப்பாக விற்பனையாகியுள்ளது.
இடதுசாரி நூல்கள் அமோக விற்பனை
“2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பு நடந்த ஒவ்வொரு தேர்தல்களிலும் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, துர்கா பூஜைத் திருவிழாவின் புத்தக விற்பனையிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டது” என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் எழுதியுள்ளது. கார்ல் மார்க்ஸ், சேகுவேரா ,சீத்தாராம் யெச்சூரி ஆகியோரின் புத்தகங்கள் நல்ல விற்பனையாகின. இந்துத்துவா நாயகர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சியாம பிரசாத் முகர்ஜி மற்றும் தீன்தயாள் உபாத்யாயா ஆகியோரின் புத்தகங்கள் தேங்கிக் கிடந்தன. சீத்தாராம் யெச்சூரி எழுதிய விடுதலையின் 75 ஆண்டுகள், கார்ல் மார்க்சின் தாஸ் கேபிடல், கம்யூனிஸ்ட் அறிக்கை, சேகுவேராவின் மோட்டார்சைக்கிள் குறிப்புகள் மற்றும் விளாடிமிர் லெனினின் அரசும் புரட்சியும் ஆகிய புத்தகங்கள் ஏராளமாக இடம் பிடித்திருந்தன. மாநிலம் முழுவதும் எங்கள் கடைகளில் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை விற்றோம் என்று பாஜகவினர் அறிவித்தனர். இந்த விற்பனையை வெறும் இரண்டு பகுதிகளிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புத்தக மையங்கள் எட்டிவிட்டன. இடதுசாரிகளைப் போன்று இந்த விஷயத்தில் தங்களால் இயங்க முடியவில்லை என்று பாஜகவின் தலைவர் ஒருவர் தி டெலிகிராப் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார். பொது வாழ்க்கையில் 20 ஆண்டுகள் என்ற பிரதமர் மோடி குறித்த புத்தகத்தை வாங்க ஆட்களே இல்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேசிய புத்தக முகமையின் இயக்குநரான அனிருத்தா சக்கரவரத்தி கூறுகையில், “சுதன்வா தேஷ்பாண்டே எழுதிய “ஹல்லாபோல் - சப்தர் ஹஸ்மியின் வாழ்வும், மரணமும்” என்ற புத்தகம் அதிகமாக விற்ற புத்தகங்களில் ஒன்றாகும்” என்று தெரிவித்துள்ளார்.