ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகை
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் திங்களன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி சலாஹூதின் முகமது அறிவித்திருந்தார். அதன்படி, திங்களன்று தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து நகரங்களிலும் ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது. இதையொட்டி, பள்ளிவாசல்களிலும், திறந்த வெளி மைதானங்களிலும் இஸ்லாமியர்கள் திரண்டு தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். திருச்சியில், உழவர் சந்தை மைதானத்திலும் பள்ளிவாசல்களிலும் தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தமுமுக சார்பில் சிறப்பு தொழுகை சையது முர்துசா பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த தொழுகை நிகழ்ச்சிக்கு தமுமுக கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமை தாங்கினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக ஈகைத்திருநாள் எனும் நோன்பு பெருநாள் தொழுகை தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. சுமார் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. பாப்பா குறிச்சியில் சிறப்பு தொழுகை திருச்சி பாப்பாக்குறிச்சி காட்டூர் பர்மா காலனியில் அமைந்துள்ள ரஹ்மானியா பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தலைமை இமாம் முகமது முஸ்தபா தொழுகை நடத்தி, உலக ஒற்றுமை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தார். தொழுகையில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.