tamilnadu

img

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்போருக்கும் அபராதம்: அரசு அறிவிப்பு

சென்னை, அக். 20- மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்க ளுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யும் போக்குவரத்தின் புதிய விதிமுறைகள் அக்.19 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் சாலை விபத்து மரணங்கள் தமிழகத்தில் தான் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடந்தாண்டு மட்டும் தமிழகத்தில் 11,419 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 1,026 பேர் சாலை விபத்தில் சிக்கி இறந்துள்ளனர். சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், புது திட்டத்தையும் அமல்படுத்தி வரு கின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு ஒன்றிய  அரசு கொண்டுவந்த புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தில், தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு மட்டும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அவை நீதி மன்றம் மூலமாக பெறப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு மட்டும் சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 1,178 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அந்த வகையில் வியாழக்கிழமை (அக். 20) முதல் சென்னையில் புதிய  போக்குவரத்து விதி அமலுக்கு வந்துள்ளது.  குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் நபரிடம் மட்டுமே போக்குவரத்து காவல் துறையி னர் அபராதம் வசூலித்த நிலையில், தற்போது வாகன ஓட்டுனர் குடிபோதை யில் இருந்து, பின்னால் அமர்ந்து செல்வோர் குடிபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் ஓட்டுநர் குடித்துவிட்டு வாக னம் ஓட்டினால், அவருடன் பயணிக்கும் நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு  அபராதம் விதிக்கப்படும் என்றும், அதே நேரத்தில், சவாரி செல்லும் போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது என்றும் போக்கு வரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.  இந்த நடைமுறைகள் புதன்கிழமை நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டு வழக்கு  பதிவு செய்யப்படுவதாகவும், அபராதம் விதிக்கப்படுவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகன சட்டம்  பிரிவு 185 போதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் 188 குற்றத்திற்கு துணை போகுதல் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து  அபராதம் வசூலிக்கப்படும் என்று போக்கு வரத்து காவல்துறை விளக்கமளித்துள்ளது.