tamilnadu

img

இயற்கை என்றும் இன்பமே! - சின்னமணல்மேடு த.இராமலிங்கம்

முத்து முத்தா முல்லையும்
 முகத்தைக் காட்டும் கொடியிலே
கொத்துக் கொத்தாப் பூத்துமே
 குழந்தை போலச் சிரிக்குது.

மணத்தை எங்கும் பரப்புது
 மகிழ்ச்சி நெஞ்சில் நிரப்புது
மணத்தைக் காட்டி இழுக்குது
 வண்டும் வட்டம் போடுது.

வட்டம் போட்டு வண்டுமே
 வந்து தேனைக் குடிக்குது
முட்ட முட்டக் குடித்ததால்
 மூச்சில் லாமல் கிடக்குது.

கிடக்கும் வண்டைக் காற்றுமே
 கிளப்பிக் கிளப்பிப் பார்க்குது
அடங்கிப் பூவின் மடியிலே
 அதுவும் படுத்துத் தூங்குது.

வண்டு தூங்கத் தென்றலும்
 வந்து விசிறி வீசுது
கண்டு கொண்ட குயிலுமே
 கனிந்து பாட்டைப் பாடுது.

அன்புத் தங்காய் பாரடி
 அழகின் ஆட்சி தேனடி
இன்பம் இன்பம் இன்பமே
 இயற்கை என்றும் இன்பமே!