மே 20 தஞ்சாவூரில் 4 இடங்களில் மறியல் போராட்டம் அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
தஞ்சாவூர், மே 3-
தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை காலை 11 மணிக்கு, தஞ்சாவூர் பாலாஜி நகர் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் ஆர். தில்லைவனம், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் என்.மோகன்ராஜ் ஆகியோர் வேலைநிறுத்த நோக்கங்களை விளக்கிப் பேசினர்.
கூட்டத்தில், சிஐடியு தலைவர்கள் ஆர்.மனோகரன், மாவட்டத் தலைவர் ம.கண்ணன், மாவட்டப் பொருளாளர் பி.என். பேர்நீதியாழ்வார், இ.டி.எஸ். மூர்த்தி, சாய்சித்ரா, ரவிக்குமார், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் துரை. மதிவாணன், நிர்வாகி எம்.சேகர், தொமுச நிர்வாகிகள் பாஸ்டீன், காளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக, தொழிலாளர் சட்டங்களை நான்காக சுருக்கியது, உழைப்பு சுரண்டலையும், நாட்டின் வளங்களையும் கொள்ளையடிக்க தாராளமயமாக்கியது, ஒப்பந்தம், அவுட்சோர்சிங் முறைகளில் குறைவான ஊதியத்தில் வேலைக்கு அமர்த்துவது, பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது உள்ளிட்ட ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை கண்டித்து மே 20 ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த அழைப்பினை ஏற்று தஞ்சை மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தை விளக்கி பட்டுக்கோட்டை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய மூன்று மையங்களில் மே 8, 9, 10 ஆகிய தேதிகளில் ஆயத்த மாநாடு நடத்துவது என்றும், மே 20 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்த மறியல் போராட்டத்தை தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய நான்கு மையங்களில் பேரணியாகச் சென்று தலைமை அஞ்சலகம் முன் மறியல் போராட்டம் நடத்துவது என்றும், வேலை நிறுத்தத்தில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து பத்தாயிரம் பேர் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது
தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள்: மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக் கூட்டம்
புதுக்கோட்டை, மே 3- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்கள் குறித்த மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் 11,681 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் 11,448 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். எனவே, தகுதியுள்ள மாணாக்கர்களுக்கு ரூ.1000 ஊக்கத் தொகை சரியான முறையில் வழங்கிடவும், தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டங்கள் மாணாக்கர்களுக்கு உரிய முறையில் சென்றடைவதை உறுதி செய்திடவும் தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ. ராஜராஜன், மாவட்ட சமூகநல அலுவலர் க.ந. கோகுலப்பிரியா, முதன்மை கல்வி அலுவலர் கூ. சண்முகம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் த. நந்த குமார், மாமன்னர் கல்லூரி முதல்வர் பா. புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒரே மரத்தில் 4 ராட்சத மலைத் தேன் அடைகள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
மயிலாடுதுறை, மே 3- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் கொத்தங்குடி ஊராட்சி, பனங்குடி கிராமத்தில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள இராட்சத மலைத் தேன் கூண்டுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பனங்குடி கிராமம், பிள்ளையார் கோவில் அருகே, நெல்லடித்தெருவையொட்டிய பகுதியில் சந்திரமோகன் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள மரத்தில், 4 இராட்சத மலைத்தேன் கூடுகள் கட்டியுள்ளதாக, பொதுமக்கள் அச்சமுற்று வருகின்றனர். குடியிருப்பையொட்டி தேன் கூடுகள் இருப்பதால், அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளை தேனீக்கள் தாக்குவதோடு, பொதுமக்களையும் தேனீக்கள் தாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக தீயணைப்புதுறையினர் பொதுமக்களை அச்சுறுத்தும் இராட்சத தேன் கூடுகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெட்டுவெந்நி மீன் மார்க்கெட் இடமாற்றம்
குழித்துறை, மே 3- வெட்டுவெந்நி மீன் மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியில் தாமிரபரணி ஆற்றின் கரையில் குழித்துறை நகராட்சியின் மீன் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்தப் பகுதியின் ரோடு கான்கிரீட் பணி மற்றும் நவீன மார்க்கெட் கட்டுமான பணி துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த மீன் மார்க்கெட் வெட்டுவெந்நி ஜங்ஷனில் பயணிகள் நிழலகத்திற்கு முன் பகுதிக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 25 நாட்கள் இந்த பகுதியில் இந்த மார்க்கெட் செயல்படும். பணி முடிந்த பிறகு மீண்டும் அங்கு மாற்றப்படும்.