tamilnadu

img

டி.கல்லுப்பட்டி, சேடப்பட்டியில் போதிய மழையின்மையால் கருகி அழியும் மக்காச்சோளப் பயிர்கள்

மதுரை, நவ.4 - மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள டி.கல்லுப்பட்டி மற்றும் சேடப்பட்டி ஒன்றியங்களில் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் மக்காச்சோளம், வெள்ளரி, தட்டைப்பயிறு, உளுந்து மற்றும் நெல் ஆகியவற்றை மானாவாரி பயிர்களாக பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக மக்காச்சோளம் முக்கிய பயிராக உள்ளது. ஆடி-ஆவணி மாதங்களில் பயிரிடப்படும் மக்காச்சோளம் வழக்கமாக ஜனவரி மாதத்தில் அறுவடைக்கு வரும்.  இந்த ஆண்டு டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் மட்டும் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் போதிய மழையின்மையால் பயிர்கள் கருகி அழிந்து வருகின்றன. இதுகுறித்து காடனேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எத்திராஜ் கூற்றுப்படி, ஒரு ஏக்கர் மக்காச்சோள சாகுபடிக்கான விரிவான செலவு விபரம்: விதை: ஒரு ஏக்கருக்கு 12 கிலோ தேவைப்படும் (4 பை, ஒரு பையில் 3 கிலோ),  ஒரு பை விதையின் விலை: ரூ.1,300 (மொத்த விதை செலவு: ரூ.5,000) உழவு கூலி: ரூ.5,000 முதல் 6,000 வரை நடவு கூலி: ரூ.3,000 உரம்: இரண்டு முறை போட வேண்டும் (2 மூட்டை - ரூ.2,500) உரமிடும் கூலி: ஒரு நபருக்கு ரூ.1,000 களை எடுக்கும் கூலி: ரூ.5,000 என மொத்தம் ஒரு ஏக்கருக்கு ரூ.22,000 முதல் 25,000 வரை செலவாகிறது. கடந்த மூன்று-நான்கு ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகள் தொடர் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் படைப்புழு தாக்குதல் கடந்த ஆண்டு வெட்டுக்கிளி தாக்குதல் இந்த ஆண்டு வறட்சி பாப்பையாபுரம் கண்மாய் அருகில் உள்ள முட்புதரில் இருந்து வரும் காட்டுப்பன்றிகள் மற்றும் மான்களின் தொல்லை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் கூறுகையில், “மதுரை மாவட்டம் நெல், வாழை, தென்னை, கம்பு, சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கு பெயர் பெற்றது. டி.கல்லுப்பட்டி-பேரையூர் பகுதியில் மக்காச்சோளமே பிரதான பயிராக உள்ளது.  கடன் வாங்கி பயிரிடும் விவசாயிகள் தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வருவதால், மாவட்ட வேளாண்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்” என்றார்.