“வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்’ மகாகவி பாரதி இமயமலையில் உலாவி வருவதாக கற்பனை செய்து இருக்கிறார். பல கவிஞர்களும் உலாவியிருக்கலாம், முதன் முதலில் உண்மையாக உலாவியவர் யார்?
1953, மே 29, காலை 11:30 மணி. நியூசிலாந்தை சேர்ந்த 33 வயதான தேனீ வளர்ப்பு விவசாயி எட்மண்ட் ஹிலாரியும் அவரது வழிகாட்டி நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் நோர்கேயும் முதன்முதலாக இமயமலையின் உச்சியை தொட்டனர். உலகிலேயே உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை இருவரும் எட்டிப் பிடித்தனர். கட்டிப்பிடித்துத் தழுவி மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். வெள்ளிப்பனி மலையின் மீது உண்மையாகவே உலாவினர். ஆவணப்படுத்த புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
உலகிலேயே உயரமான சிகரம் எவ ரெஸ்ட். 8100 மீட்டர். 26545 அடி. 1856ல் பிரிட்ட னைச் சேர்ந்த எவரெஸ்ட் என்ற சர்வேயர் இதனைக் கண்டுபிடித்தார். அவரது பெய ரையே இச்சிகரத்துக்கு சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது. தெற்காசியாவில் இந்தி யாவின் வடக்கு எல்லையில் சீன- நேபாள எல்லையில் இருக்கிறது. எவரெஸ்ட் சிகரம் கண்டறியப்பட்டு 97 ஆண்டுகளுக்குப் பின்னர் டென்சிங், ஹிலாரி இருவரும் தாங்கள் கொண்டு சென்ற பொருட்களை எவரெஸ்ட் சிகரத்துக்கும் இமயமலைக்கும் காணிக்கையாகப் புதைத் தனர். கீழே இறங்கும்போது எவரெஸ்ட் சிக ரத்தை அடைய முயற்சி செய்து 1924, ஜூன் 8ல் வழியில் காணாமல் போன ஜார்ஜ் மல்லோரி குறித்து ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்று தேடினர். துப்பு எதுவும் கிடைக்கவில்லை. திரும்பும் வழியில் மேலே திணறிக் கொண்டி ருந்த சக மலையேறும் வீரர் ஜார்ஜ் லோவைச் சந்தித்தனர். “சாரி ஜார்ஜ் நாங்கள் பாத கனை வீழ்த்தி விட்டோம்” என்று பெரு மிதத்தோடு கூறினர்.
டென்சிங், ஹிலாரியின் சாதனை எளிதா னது அல்ல. எவரெஸ்ட் சிகரத்தை ஏறியடைய பலர் முயற்சி செய்தனர். 1921, ஜூன் 5 ல் முயற்சி செய்த அலெக்சாண்டர் மிட்செல் கெல்லாஸ் மரணம் அடைந்தார். ஹில்லாரி முயற்சியை மேற்கொள்ளும் போது 15 நபர்கள் மரணம் அடைந்திருந்தனர். சிலர் ஜார்ஜ் மல்லோரியைப் போல் தகவல் ஏதுமே இல்லாமல் காணாமல் போய்விட்டனர். இத்த கைய ஆபத்தும் சாகசமும் நிறைந்த சவா லைத் தான் டென்சிங்கும், ஹிலாரியும் முயற்சி செய்தனர். எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த வெற்றிக்காக ஹிலாரிக்கு இங்கிலாந்து அரசு ‘சர்’ பட்டமும், டென்சிங்க்கு இங்கிலாந்தின் ஜார்ஜ் பதக்கமும் அளிக்கப்பட்டது. பிற்காலத்தில் ஹில்லாரி இந்த நிகழ்வை,” நாங்கள் 1953 இல் ஏறிய பின்னர் எவரெஸ்ட் அடைய யாரும் முயற்சிக்க மாட்டார்கள். அத்துடன் எவரெஸ்ட் கதை முடிந்துவிடும் என்று நான் நம்பினேன்” என்று நினைவு கூர்ந்தார். இந்தப் பயணத்திற்கு பிறகு ஹில்லாரியும் டென்சிங்கும் ஒருவரை யொருவர் தொடர்பு கொண்டதாகத் தெரிய வில்லை. மீண்டும் எவரெஸ்ட் சிகரத்திற்கு போகவும் முயற்சிக்கவில்லை. ஆனால் இவர்களின் சாதனை வெற்றிக்குப் பின்னர் தற்போது டிசம்பர் 2023 வரை, நேபாளத்தைச் சேர்ந்த 1856 பேர், அமெரிக்காவைச் சேர்ந்த 783பேர், இந்தி யாவைச் சேர்ந்த 544 பேர் உட்பட வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 6,664 நபர்கள் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை புரிந்துள்ளனர்.
இதில் குறிப்பாக நேபாளத்தைச் சேர்ந்த ஷெர்பாவும் அவரது வழிகாட்டி கமி ரீட்டா ஷெர்பாவும் 2024, மே வரை 30 முறை எவ ரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ள னர். இங்கிலாந்தைச் சேர்ந்த கென்டன் கூல் இதுவரை 18 முறை ஏறியுள்ளார். 1975, மே 16 இல் ஜப்பானைச் சேர்ந்த இல்லத்தரசி திருமதி ஜூன்கோ தபேய் எவ ரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர். நேபா ளத்தின் லக்பா ஷெர்பா என்ற பெண் இது வரை 10 முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறி யுள்ளார். இந்தியாவின் மூன்றாவது முயற்சி யில் கர்னல் அவதார் சிங் சீமாவும் அவரது வழிகாட்டி நவாங் கோம்பு ஷெர்பாவும் 1965, மே 20 இல் சிகரத்தை அடைந்து எவ ரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றனர். 1984ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய பச்சேந்திரி பால் தான் முதல் இந்தியப் பெண்மணி. பின்னர் அவர் அனைத்து பெண்கள் குழுவையும் ஒருங்கிணைத்து எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி பயணிக்கும் குழுவிற்கு தலைமை தாங்கினார்.
அதேபோல தமிழ் நாட்டில், விருதுநகர் மாவட்டம் ஜோயல்பட்டியை சேர்ந்த இரண்டு பெண்குழந்தைகளின் தாயான 34 வயதான முத்தமிழ்செல்வி. பல்வேறு மலைகளில் கண் களை மூடியவாறு ஏறியும், இறங்கியும், வில் வித்தையிலும் பல சாதனைகளை புரிந்துள் ளார். எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு பயிற்சி மேற்கொண்டார். ஆனால் பொருளாதார வசதியில்லாமல் தவித்த நிலையில் தமிழக அரசும், தன்னார்வ அமைப்புகளும் நிதியுதவி வழங்கின. இதன் மூலம் 2023 மே 23 அன்று எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்தார். தட்டையான பூமியின் நடுவே மேரு மலை. அந்த மேரு மலையை சுற்றித் தான் சூரியன், சந்திரன், கிரகங்கள், விண்மீன் கள் எல்லாம் சுற்றி வருகின்றன. மேரு மலை யின் உச்சி தான் ‘கைலாயம் ‘என்று புரா ணங்கள் கற்பனை செய்து கூறுகின்றன. விண்ணை எட்டும் எவரெஸ்ட் போன்ற இமய பகுதிகள் தான் கைலாயம் எனவும் சிலர் கூறி வந்தனர். இந்தச் சூழலில் தான் ஹில்லாரியும், டென்சிங்கும் சிகரத்தை எட்டிப் பிடித்து சாதனை செய்தனர். மேலே ஏறும்போதும், இறங்கும்போதும் வழியில் இதுவரை 340க்கும் மேற்பட்ட வர்கள் மடிந்துள்ளனர். முயற்சிக்கும் 100 பேரில் வெறும் 4 பேர் மட்டுமே எவரெஸ்ட் சிக ரத்தை அடைய முடிந்துள்ளது. சவால் மிகுந்த சாகசம் நிறைந்த ஹில்லாரி, டென்சிங்கின் சாதனை உலகையை வியப்பில் ஆழ்த்தி யது. உலகையே வியப்பில் ஆழ்த்திய இச்சாத னையை நூற்றாண்டுக் கவிஞன் தமிழ் ஒளி “எவரெஸ்ட் பிடிபட்டது “ என்ற கவிதை யில் பதிவு செய்திருப்பது அவரது சமூக வர லாற்றுணர்வை நாம் புரிந்து கொள்ள முடி யும்.
எவரெஸ்ட் பிடிபட்டது
எவரெஸ்ட் பிடிபட்டது
விண் மீது மோதுகின்ற
வெற்புமுடி ‘எவரெஸ்ட்
பெண்ணரசி’ தேவமகள்
பேருலகில் மானிடரைக்
கண்காட்டி ஏமாற்றிக்
கைப்பிடியிற் சிக்காமல்
மண் காட்டிக் கைலாய
வான்காட்டிக் கொக்கரித்தாள்!
எட்டிப் பிடிக்க வந்த
எத்தனையோ ஆடவரைத்
தட்டி உருட்டியவள்,
தாவி மிகக் கூவியவள்
கட்டிப்பிடிப்போரைக்
காலனுல கேற்றியவள்
பட்டி மகள் சிக்கிவிட்டாள்,
பாருலகே, காணாய் நீ!
மண்ணுலகில் மானிடரின்
மகிமைக்கோர் சாட்சியமாய்,
விண்ணுலகின் உச்சியிலே
வெற்றிக் கொடி பறக்கும்
கண்ணே! பெருந்திசையே!
கார்க்கடலே! வானகமே!
மண்ணே! எவரெஸ்டை
மனிதன் பிடித்து விட்டான்!
‘எட்டா எவரெஸ்ட்டை
எட்டி விட்டோம்’ என்றென்று
கொட்டிடுக வான் முரசம் !
கூறிடுக வாழ்த்தொலிகள்!
தட்டிடுக வான்முகட்டைத்
தா விடுக அந்தரமேல்!
தொட்டிடுக வெண்மதியைத்
தோள்கொட்டி ஆடிடுக!
அமுதசுரபி, ஜூலை 1953