tamilnadu

img

கம்யூனிஸ்டுகளின் ஜனநாயகமும் - தியாகமும் !

புதிதாக உருவாக்கப்பட்ட காலனியில் ஒரு புதிய வீட்டை கட்டி குடிபுகுந்தேன். ஒரு நாள் வீட்டின் முன் செடி ஒன்றை நட்டுக் கொண்டிருந்தேன். அவ்வழியே வந்த ஒரு தோழர், தோழரே நீங்களா?  இங்கு எப்ப  வந்தீங்க என்று நலம் விசாரித்தார். என்னைப் போலவே எதிரில் புதிய வீட்டுக்கு குடி வந்துள்ள நபர் இந்த சம்பாஷனையை கேட்டுவிட்டு, தோழர் சென்றவுடன், சார் நீங்கள் கம்யூ னிஸ்டா என்று பதற்றத்துடன் கேட்டார்! ஆம், என்றேன் நான்! தோழர் என்றவுடன், அந்த சொல்லுக்கு இலக்கணமாக இருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள்தான் என்று மக்கள் ஏதோ ஒரு வகையில் புரிந்து கொண்டிருப்பது ஒரு வெற்றியே!  தத்துவமே !! பொதுவில், கம்யூனிசம் என்றாலே சர்வாதிகாரம், அங்கு ஜனநாயகம் இருக்காது,  இரும்புக்கரம் கொண்டு அனைத்தையும் அடக்கி விடுவார்கள்,  இருக்கிற சொத்துக்களை பிடுங்கிக் கொள்வார்கள்  என்ற தவறான எண்ணம் உள்ளது.  அதை முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் கம்யூனிசம் என்ற நல்ல தத்துவம் பரவக்கூடாது என்று ஆரம்பத்தில் இருந்தே திட்டமிட்டு பிரச்சாரம் செய்ததின் விளைவே ஆகும். 

1848இல் வெளி வந்த “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” நூலில் முதல் பாராவிலேயே தெளிவாக இதுகுறித்து  கூறப்பட்டுள்ளது! “ஒரு பூதம் ஐரோப்பாவை  பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது,  அதுதான் கம்யூனிசம் என்னும் பூதம்”, போப்பாண்டவரும், ஜார் அரசனும்,  மெட்டர்னிக்கும், கிஸோவும்  பிரெஞ்சு  தீவிரவாத (Radicals) கொள்கையினரும், ஜெர்மன் போலீஸ் ஒற்றர்களும் என பழைய ஐரோப்பாவின் அதிகார சக்திகள் அனைத்தும் இந்த பூதத்தை விரட்டுவதற்காக ஒரு புனித கூட்டணியை அமைத்துள்ளன”   என மார்க்ஸ்-ஏங்கல்ஸ் தெளிவாக அதில் விளக்கியுள்ளனர்.  அதாவது பல்வேறு நாட்டவர் பல சீர்திருத்தவாத கொள்கையுடையவர்கள் எல்லாம் ஏன் கம்யூனிச பூதத்தை விரட்ட கூட்டணி அமைக்க வேண்டும்?  கம்யூனிசம் பொது எதிரி என்பதால்தான்! ஏன் பொது எதிரி?  “கம்யூனிசம் சொத்துடைமைக்கு எதிரி” என்பதால்!  ஆம், கம்யூனிசம் சொத்துடைமைக்கு எதிரிதான், ஆனால் அது “முதலாளித்துவ சொத்துடைமைக்குத்தான் எதிரி”. தனிநபர் உழைப்பால், சிறு விவசாயிகள் வைத்திருக்கும் நிலத்தின்பால் இருக்கும் சொத்துக்களை ஒழிப்பதல்ல கம்யூனிசத்தின் நோக்கம்.  “அனைவரின் உழைப்பால் உருவாகும் மூலதனக் குவியலைத்தான் சமுதாய உடைமையாக (அரசுடைமை) மாற்றப்படும்” என்பதே கம்யூனிசம். “அனைவரும் அவரவர் சக்திக்கேற்ப உழைக்க வேண்டும். உழைக்க இயலாதவர்களுக்கு அனைத்து வசதிகளையும் கம்யூனிச அரசு செய்து கொடுக்கும்” சுருக்கமாகச் சொன்னால், “தகுதிக்கேற்ற வேலை, தேவைக்கேற்ப ஊதியம்”  தரும்  சமுதாயமே கம்யூனிச  சமுதாயம்! இதனால் தான் முதலாளித்துவ- நிலப்பிரபுக்கள் போன்ற சக்திகள் ஒன்றுகூடி கம்யூனிசம் என்கிற பொதுவுடைமையை எதிர்க்கின்றனர்.

இப்படி உன்னதமான,  மக்களுக்கான சமுதாயத்தை அமைப்பதற்காகத்தான் 1920 இல் சோவியத் யூனியன் தாஷ்கண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை முதல் முதலாக உருவாக்கப்பட்டது! அது 1964இல்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆக பரிணாமம் எடுத்து, மக்கள் ஜனநாயகப் புரட்சி மூலம் அமைய இருக்கும் மக்கள் ஜனநாயக அரசு, சோசலிச- கம்யூனிஸ  சமுதாயத்திற்கு முந்தைய அரசாக செயல்படும் என்ற ஒரு திட்டத்தை மக்கள் முன் வைத்துள்ளது.  இத்திட்டத்தை இந்தியாவில் அமலாக்க வலுவான ஸ்தாபனமாக மாற ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கட்சியின் கிளை மாநாடுகளில் துவங்கி அகில இந்திய மாநாடு வரை நடத்திக் கொண்டுள்ளது இந்திய கம்யூனிஸ்ட்    (மார்க்சிஸ்ட்) கட்சி!    கிளைச் செயலாளரிலிருந்து, இடைக்கமிட்டிச் செயலாளர் - மாவட்டக்குழுச் செயலாளர் - மாநிலக் குழு செயலாளர் - மத்தியக்குழுச் (அகில இந்தியச்) செயலாளர் வரை மாநாடுகளில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளே ஓட்டெடுப்பு மூலம் ஜனநாயகப் பூர்வமாக தேர்வு செய்யப்படுவார்கள். அந்தந்த மட்ட கமிட்டி (குழு) உறுப்பினர்களும் அவ்வாறே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தீர்மானங்களும், முக்கியப் பிரச்சனைகளும் சம்பந்தப்பட்ட கமிட்டிகளில் விவாதிக்கப்படும். அவரவர் அவர்களது கருத்துக்களை கூற பரிபூரண சுதந்திரம் உண்டு. ஆனால்,  முடிவில் பெரும்பான்மைக் கருத்துக்களின்  அடிப்படையில் தீர்மானங்களும் முடிவுகளும் சபையில் நிறைவேற்றப்படும். அப்படி நிறைவேற்றப்படும் முடிவுகளையும் - தீர்மானங்களையும் அமலாக்க, கமிட்டிக்குள்ளே எதிர்க்கருத்து கூறியவர்களும் சேர்ந்தே ஒரு மனதாக அமலாக்கப் பாடுபடுவார்கள்.  அதைத்தான்  ஜனநாயக  மத்தியத்துவம் என்கிறது சிபிஐ(எம்)! 

சிபிஐ (எம்) கட்சிக்கென 1964இல்- கட்சித்திட்டத்தையும், 1968இல் கட்சி உறுப்பினர் முதல் நாடாளுமன்ற  - சட்டமன்ற -  அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும்,   உறுப்பினரின்   கடமை உரிமை - செயல்பாடு எப்படியிருக்க வேண்டும் என ஒரு அமைப்புச் சட்டத்தையும் வெளியிட்டுள்ளது!   ஒரு உறுப்பினர் தான் அங்கம் பெற்றுள்ள கிளையிலும் எல்லா விதமான அரசியல் கருத்துகளையும்,  ஸ்தாபன விசயங்களையும் விவாதிக்கலாம்! அதே வேளையில் தேவைப்பட்டால் அடுத்த மேல் கமிட்டிக்கும்,  அகில இந்திய தலைமைக்கும் கடிதமும் எழுதலாம்! முதலாளித்துவக் கட்சிகள் போலே நியமிக்கும் (Nominated) தலைவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லை. முற்றிலுமான ஜனநாயகம் கம்யூனிஸ்ட் கட்சியில் மட்டுமே உள்ளது என்பதை அமைப்புச்சட்டத்திலேயே அச்சிட்டு வெளியிட்டுள்ளது சிபிஐ (எம்). அதேபோல சுதந்திரப் போராட்டக் காலத்திலும் சரி, தற்போதும் சரி அந்தமான் சிறையிலிருந்து அலிப்பூர், சேலம், சென்னை, கோவை, பாளையம்கோட்டை, வேலூர் உள்ளிட்ட அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் சுவர்களுக்கு பேசும் சக்தியிருந்தால், அந்த சுவர்கள் சொல்லும், “எங்களோடு அதிக காலம் வசித்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று!” கம்யூனிஸ்டுகளின் 7ஆவது அகில  இந்திய மாநாட்டில் 422 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்களின் தகுதி ஆய்வு படிவங்களை ஆய்வு செய்வதில் இவர்களின் மொத்த சிறை வாழ்க்கை 1340 வருடங்கள் ஆகும். தலைமறைவு வாழ்க்கை 849 வருடங்களாகும்!

தியாகம் என்றால் கம்யூனிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் என்றால் தியாகம் என்ற நடைமுறையோடு பயணிப்பவர்கள் கம்யூனிஸ்டுகள்! மக்களுக்காகப் போராடியதால் 22 கம்யூனிஸ்டுகள், 1950 பிப்ரவரி 11இல் சேலம் சிறைக்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். 1968இல் விவசாயிகளுக்காக போராடியதால் தஞ்சை வெண்மணியில் கருகிய 44 உயிர்களும் கம்யூனிஸ்ட் கட்சியின் குடும்பமே! 1946இல், கோவையில் தொழிலாளர்களுக்காக போராடிய போது சின்னையன் - ராமையன் - ரங்கண்ணன் - வெங்கடாசலம் ஆகிய  கம்யூனிஸ்டுகள் தூக்கிலிடப்பட்டார்கள்! ஸ்டேன்ஸ் மில் தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடிய போது அம்மு உள்ளிட்ட ஏழு கம்யூனிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்! இங்ஙனம் வாரம் ஒரு தோழரை நாடு முழுவதும் மதநல்லிணக்கத்திற்காக, தேச ஒற்றுமைக்காக, மக்களின் நலனுக்காக தியாகம் செய்வது கம்யூனிஸ்டுகளே! கம்யூனிஸ்ட்கள் என்றும் புதைக்கப்படுவதில்லை மாறாக விதைக்கப்பட்டிருக்கிறார்கள்.  கம்யூனிஸ்ட் கட்சி என்பது கம்யூனிஸ்டுகளின் கட்சி என்று புரிந்து கொள்ளக்கூடாது! கம்யூனிஸ்ட் கட்சி என்பது மக்களின் கட்சி! மக்களுக்காகவே இயங்குகிறது - இருக்கிறது! எந்த முடிவானாலும், அரசியல் தீர்மானங்களானாலும் மக்களிடம்தான் முதலில் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிக்கும். இன்றளவும் மக்களிடம் உண்டியல் வசூல் - நிதி வசூல் எதற்காக நடத்தப்படுகிறது! மக்கள் பணத்தில், மக்களின் நலனுக்காகவே செயல்படுவதால்தான்! அதனால்தான் கட்சியின் திட்டமான மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலம் அமைக்கப்படும் அரசின் பெயரே “மக்கள் ஜனநாயக அரசு” என்று கட்சி சொல்கிறது.

உணவு - உடை - உறைவிடம். உத்தரவாதம் மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பான சமுதாயம் கம்யூனிச சமுதாயமே! இச்சமுதாயத்தை சமைக்க அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறது சிபிஐ(எம்). அதன் 24ஆவது அகில இந்திய மாநாடு 2025 ஏப்ரல் 2-7 தேதிகளில் மதுரையில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக 24வது தமிழ் மாநில மாநாடு விழுப்புரத்தில் ஜனவரி 2, 3, 4 தேதிகளிலும் நடைபெற உள்ளது! இப்போதுள்ள பெருமுதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசை அடியோடு அகற்றிவிட்டு, தொழிலாளி வர்க்கம் அரசு அதிகாரத்தை கைப்பற்றி அரியணை ஏற வேண்டும் என்றால் வலிமையான, கூர்மையான ஆயுதம் அவசியம் தேவைப்படுகிறது. அந்த ஆயுதம் தான் சிபிஐ (எம்) ஸ்தாபன அமைப்பு! அதை வலிமையாக்குவோம்!