ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா?
கேரளாவில் ஏற்கெனவே இருந்த ஆளுநர் ஆரிப் முகமது கானை போலவே தற்போதுள்ள ஆளுநர் ராஜேந்திர அர்லேகரும் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசுடன் மோதல் போக்கை துவக்கியுள்ளார். மாநில அரசால் சட்டப்பேரவை யில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், ஏற்கனவே இருந்த ஆளுநர் காலம் கடத்தினார். தமிழக ஆளுநரும் அப்படி செயல்பட்டபோது திமுக அரசு உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதிமன்றமே மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது. இது ஆளுநர்களுக்கு சரியான பாடமாக அமைந்த போதிலும் எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை.
தமிழக ஆளுநர் ரவி, அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்ற நடைமுறையை மாற்றி முதலில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று கூறி வருகிறார். அவர் கலந்து கொண்ட பொதிகை தொலைக்காட்சி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது ‘தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரியைத் தவிர்த்து விட்டுப் பாடியது நினைவிருக்கலாம். இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருவனந்த புரத்தில் ஆளுநர் மாளிகையில் மாநில அரசின் சார்பில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கான விழா அழைப்பிதழ் குறித்து ஆலோசனை நடத்தும்போது, ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், அரசு விழாவில் முதல் நிகழ்வாக பாரத மாதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தவேண்டும் என்று கூறினார். ஆளுநர் அப்படி கூறியவுடன் அந்த படத்தை அனுப்புங்கள் என்று மாநில அரசு கேட்டபோது, அகண்ட பாரத வரைப்படத்திற்கு முன்பு காவிக் கொடியுடன் நிற்கும் பாரத மாதா (ஆர்எஸ்எஸ் பயன்படுத்தும்) படத்தை ஆளு நர் மாளிகை அனுப்பியுள்ளது. இது மதம் சார்ந்த படம் என்பதால் அரசு விழாக்களில் அனுமதிக்க முடியாது என்று கேரள அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. ஆனால் ஆளுநர் மாளிகை இந்த படத்திற்கு மரியாதை செலுத்தியே ஆக வேண்டும் என கூறியதைத் தொடர்ந்து விழாவை மாநில அரசு புறக்கணித்தது.
ஆளுநரின் செயல் அரசியல் அமைப்புக்கு எதிரானது மட்டுமல்ல; கேரளாவில் அரசு விழாக்களில் பின்பற்றப்படும் நடைமுறைக்கும் எதிரானது. அரசின் நிலைப்பாட்டுக்கு அம்மாநிலத்தில் எதிர்க் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கேரளா மட்டுமல்ல, நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒன்றிய அரசின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆளு நர்கள் ஆர்எஸ்எஸ் சிந்தனையில் ஊறியவர்கள். எனவேதான் அவர்கள் திட்டமிட்டு அரசிய லமைப்புச் சட்டத்தை அவமதிக்கிறார்கள். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மேடையாக மாற்ற முயற்சிக்கும் ஆளுநர்களின் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது அவசியம்.