வாழைத்தாரை பாதுகாக்க குளிர்சாதன கிடங்கு வசதி ஏற்படுத்த விவசாயிகள் வேண்டுகோள்
பாபநாசம், மே 2- அய்யம்பேட்டை அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடி, கூடலூர், குடிகாட்டில் 200 ஏக்கரில் வாழை சாகுபடியை விவசாயிகள் மேற் கொண்டுள்ளனர். மொந்தன், ரஸ்தாளி, பூவன், செவ்வாழை உள்ளிட்ட ரக வாழையை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் கரும்பு பயிரில் நேர்ந்த மஞ்சள் நோய் தாக்குதலால் கரும்பு சாகுபடி முற்றிலும் குறைந்து, வாழை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ரஸ்தாளி ரகத்தைப் பொருத்தவரை, ஒரு ஈடு எடுத்த பின்னர் புதிதாக கன்று வைக்க வேண்டும். மற்ற ரகங்கள் 3 முறை பலன் தரும். தற்போது வாழைக்கு உரிய விலை இல்லாததால், அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி முன்னோடி விவசாயி ஜெய்சங்கர் மற்றும் அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், சித்திரை, ஆடி, மார்கழி, புரட்டாசி மாதங்களில் வாழைக்கு உரிய விலை கிடைக்காது. பூவன் ரக வாழை மட்டுமே இலைக்கு உபயோகமாகும். வாழை இலைக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை என்றாலும், வாழை இலையை அறுத்துத் தான் ஆக வேண்டும். அப்படி அறுக்க வில்லையென்றால், அடுத்தடுத்த இலை தெளிவாக இருக்காது. சீஸன் காலங்களில், சுப முகூர்த்த நாட்களில்தான் மார்க்கெட் இருக்கும். சமீபத்தில் கூட காற்று மழையில், வயலில் இருந்த 300 வாழைகள் பாதித்தன. இங்கு விளையும் வாழைத் தார்களை திருவையாறு, திருச்சி ஏல மையத்திற்கு கொண்டு செல்கிறோம். ஏலம் விடுபவர்களுக்கு பத்து சதவீத கமிஷன் சென்று விடுகிறது. ஒரு வாழைக்கு உரம், உழவு, ஆட்கூலி என ரூ.200-லிருந்து ரூ.250 செலவாகிறது. ரூ.400-க்கு ஏலம் போனால்தான் கட்டுப்படியாகும். ஆனால் ரூ.100-க்கு தான் போகிறது. வாழையில் பூவன், பச்சை நாடான் விளைய, 10 முதல் 12 மாதமும், மொந்தன், ரஸ்தாளிக்கு 12 மாதமும், செவ்வாழைக்கு 14 மாதமும் தேவைப்படுகிறது. ரஸ்தாளியை மறுதாம்பு வைக்க முடியாது. வாழைக்கு காப்பீட்டை எளிமையாக்குவதுடன், வாழை ரகத்திற்கேற்ற குறைந்தபட்ச ஆதார விலையை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும். குறிப்பிட்ட பகுதி விவசாயிகள் காற்று, மழையால் எதிர்பாராமல் கடுமையான பாதிப்பை சந்திக்கும்போது உரிய இழப்பீட்டை அரசாங்கம் வழங்க வேண்டும். விலை சரிவைச் சந்திக்கும்போது வாழைத்தாரை பாதுகாக்க குளிர் சாதன கிடங்கு வசதி ஏற்படுத்த வேண்டும்” என்றனர்.