tamilnadu

மு ற் று கை - நவகவி

எட்டு மணி நேர ஓய்வு
எட்டு மணி நேர உறக்கம்
வேண்டாம் என்று வேலை நிறுத்தம்!
வாரம் முழுதும் வேலை செய்ய
வாய்ப்பு வழங்காமல்
தொண்ணூறு மணி மட்டுமே
தொழிலாளரை பணியாற்றச் சொல்லும்
துரோகத்தைக் கண்டித்து
பாரத தேசம் முழுவதும்
பாட்டாளிகள் ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் தலைவர்
ஆவேசமாய் பேசுகிறார்:
எட்டு மணி உறக்க நேரம்
இனிமேல் தனியாக எதற்கு?
எந்திரத்தை ஒரு கண்ணால்
கவனித்துக் கொண்டே 
இன்னொரு கண்ணால் தூங்கிக் கொள்ளலாம்.

சாப்பிட எதற்கு தனியாய் லஞ்ச் பிரேக்?
சமைப்பதும் எதற்கு? ஜொமேட்டோ இருக்கு.
வலது கை கொண்டு மிஷினை இயக்கு.
இடது கை கொண்டு உணவை விழுங்கு.

வெளிக்கு போக கழிவறை எதற்கு?
பேம்பர்ஸ் டயபர் கட்டிக்கொண்டு
கக்கூஸ் போகும் நேரத்தை
கச்சிதமாக மிச்சம் பிடிக்கலாம்.

பெரியார் போல மூத்திரச் சட்டியை
பேஷாய் உடம்பில் பொருத்திக் கொள்ளலாம்.
வேலை நேரத்தை வீண் செய்து
ஒன்னுக்குப் போகும் 
உபத்திரவத்தை இப்படி
பின்னுக்குத் தள்ளி 
பிரமாதமாய் பணி செய்யலாம்.

ஓய்வு நேரத்தில் பொண்டாட்டியை
உற்று உற்றுப் பார்த்துக் கொண்டு
காலத்தை வீணாய் கழிக்கலாமா?
தொழிற்சாலையில் இருந்தபடியே
தோதாய் பல ஃப்ளையிங் கிஸ்கள்
மனைவி இருக்கும் திசை நோக்கி
மகிழ்ச்சியாய் தந்த படி
இன்பமாய் வேலை செய்யலாம்!

கலவி செய்து மனைவியை
கருத்தரிக்க வைத்து
இன்பம் துய்க்க ஏன்நேரம் ஒதுக்கணும்?
இருக்கவே இருக்கு விந்து வங்கிகள்.
சந்து எங்கும் விந்து வங்கிகள்.
முந்தும் விந்தை அங்கு தந்து
ஊசி வழியாய் மனைவிக்கு ஏற்றி
ஈசி யாக பிள்ளை பெறலாம் !

அதுபோல் பெண் தொழிலாளர் யாவரும்
ஆயுசு முழுதும் வேலை செய்த பின்
கிழவி வயதில் குழவி பெறலாம்.
எழுபது வயதிலும்
கருத்தரிப்பு மையங்கள் மூலம்
குழந்தை பெற்றிடல் சாத்தியம் ஆகும்.

ஓய்வு பெற்ற பிறகு
உந்து வண்டி நிலையங்களிலே
உறங்கிக் கொள்ளலாம், வீடு எதற்கு?
இசையை கேட்க ஏன் ஓய்வு நேரம் ?
இயந்திர ஓசை கேள்இனி தாகும்.
சினிமா பார்ப்பதை விட்டு விலகு,
சேர்மேன் பங்களா பார் மிக அழகு.

கோயில் குளங்களை சுற்றுவ தேனோ?
சேர்மேன் சம்பளம்
ஐம்பது கோடி அடுக்கிய பீரோ
தினமும் சுற்றி தெண்டனிட் டாலே
அடுத்த பிறவியில் 
நமக்கும் ஐம்பது கோடிகை மேலே !

தொழிலாளர் தலைவர் பேசி முடித்தார்.
வாரம் முழுவதும் வேலை செய்யும்
வாய்ப்பு கேட்டு கோஷம் போட்டு
வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம்!
தர்ணா ஓசையால் கம்பெனி சேர்மன்
தலைமை அலுவலகம் 
கடைக்கால் வரைக்கும் குலுங்கி அதிர்ந்தது.
O I O
கோஷம் வந்து காதைத் துளைக்க
குஷன் சுழல் நாற்காலியில்
காட்டெருமைபோல் தூக்கம் போட்டு
கனவு கண்டிருந்த கம்பெனி சேர்மேன் 
போதை தெளிந்தார்! பொசுக்கென எழுந்தார்!
கண்டது கனவு!கண்ணை கசக்கினார்!

நித்திரையின்றி நடுநிசி வரை
நேற்று இரவு மது விருந்து.
பொண்டாட்டி முகத்தை உற்று உற்று
ஆண்டுக் கணக்காய் வெறித்துப் பார்த்து
அதிகாரிக்கு போர் அடித்திருந்தது
நட்சத்திர விடுதி டான்ஸ்காரி முகம்
நடுநிசி வரை டால் அடித்திருந்தது.
மதுமயக்கம் மங்கை மயக்கம்
அதனால் குழப்பம் ; நண்பகல் உறக்கம் !

ஆடுகள் எல்லாம் தன்னை நாடி
ஆசையாய் தானே வருவது போல
நரியின் கனவு....அதுபோல் நமது
கம்பெனி சேர்மேன் கனவு!
பணி நேரம் அதிகம் கேட்டல்ல
பாட்டாளிகளின் பெருங்கோஷம்.
பணி நேரம் அதிகரிக்கச் சொன்னதால்
பாட்டாளிகளின் ஆவேசம்!

ஆர்ப்பாட்டம் அதிகரித்து
கோஷம் கூடுதல் ஆகி
வீதியில் ஊர்வல வெள்ளம்....அது
சேர்மேன் அறைக்குள் செல்லும்!

தர்ணா கெரோ ஆகி முற்றுகை!
தத்த ளித்தது சேர்மன் அறை!
ஐம்பது கோடி சம்பளக் காரர்
அங்கே வைக்கப் பட்டார் சிறை!