மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ளது மேலவளவு, இங்குதலித் மக்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களது குடும்பங்களில் யாராவது இறந்துவிட்டால் இறந்தவர் உடலை மயானத்திற்குக் கொண்டுசெல்ல பாதை இல்லை. விவசாயப் பணிகள் நடைபெறும் காலங்களில வயல்வெளிக்குள் இறங்கித்தான் செல்லவேண்டும். தலித் மக்கள் மயானத்திற்குசெல்ல பாதைவசதி கேட்டு பேராடி வருகிறார்கள்.
மதுரை தொகுதி மக்களவை உறுப்பினராக பொறுப்பு வகித்து மறைந்ததோழர் பொ.மோகன் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண எடுத்த முயற்சிகள் ஏராளம். அவர் பல முறை இப்பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோரை சந்தித்து முறையிட்டுள்ளார். ஆனால், மாவட்ட நிர்வாகம் இன்றுவரை அலட்சியமாகவும் மெத்தனமாகவுமே உள்ளது.2020-ஆம் ஆண்டிலும் இந்தப் பிரச்சனை தொடர்கிறது. மேலவளவு காந்திநகரைச் சேர்ந்த கருப்பன் மனைவி கட்டச்சி (65) உடல்நலக்குறைவின் காரணமாக இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் வயல் வழியாகச் சென்றது. குறிப்பாக நெற்பயிருக்குள் இறங்கிச் சென்றுஅவரது உடலை அடக்கம் செய்தனர்.மக்களவை உறுப்பினர் சொன்னாலும் கேட்கமாட்டோம்; தலித் மக்கள் மனுக் கொடுத்தாலும் கண்டு கொள்ளமாட்டோம்; சாலையை மறித்தால் காவல்துறையை வைத்து மிரட்டுவோம்என்ற நிலையைத் தான் மாவட்ட நிர்வாகம் கையாள்கிறது.
இப்பிரச்சனை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலூர் தாலுகா செயலாளர் கண்ணன் கூறுகையில், “தலித் மக்கள் மயானத்திற்கு செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட தூரம் பாதைஉள்ளது. அதன் பின்னர் வயலில் இறங்கித்தான் செல்ல வேண்டும். இந்த அவலத்திற்கு தீர்வு காணவேண்டுமென பலமுறை மனு அளித்துவிட்டோம். மூன் றாண்டுகளுக்கு முன்பு கூட மேலவளவு தலித் மக்களுக்கு சுடுகாட்டுப்பாதை கேட்டு உண்ணாவிரதம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. உடனடியாக ஆவன செய்வதாக அதிகாரிகள் கூறினார்கள். மூன்றாண்டுகளாகியும் இது தொடர்பானகோப்புகள் நகர்ந்து நகர்ந்து எங்கே சென்றது எனத் தெரியவில்லை. இப்போதும் கூட மதுரைமக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் தலித் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர் தீர்வுகாண்பதாக உறுதியளித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் சுடுகாட்டு பாதை பிரச்சனைக்கு தீர்வு காண முதற்கட்ட பணிகளை ஏழு நாட்களுக்குள் தொடங்க வேண்டும்” என்றார். (ந.நி)