tamilnadu

img

உலக அரங்கில் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்

உலக அரங்கில் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தவர், பசுமைப் புரட்சியின் தந்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் என்று அவரது  மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு புகழஞ்சலி செலுத்தியுள்ளது.  இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு: இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டவரும், வேளாண் விஞ்ஞானியும், முற்போக்கு சிந்தனை கொண்டவருமான எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக செப்டம்பர் 28 வியாழனன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றோம். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ்நாடு மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது. வங்கத்தில் ஏற்பட்ட உணவுப் பஞ்சம் இவரை கடுமையாக பாதித்தது. அப்போதே வேளாண்துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து, வேளாண் கல்லூரியில் பயின்று முதுகலை பட்டத்தை பெற்றவர். இந்திய அரசுப் பணியின் உயர்ந்த நிலை அதிகாரியாக தேர்ச்சி பெற்றும் அப்பணியில் சேராமல் வேளாண் துறையில் தடம் பதித்தவர். வேளாண் துறையில் மிகப் பெரிய விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள், உலக அளவில் பல்வேறு சாதனைகளை புரிந்தவர். வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பம், தேசிய அளவிலான வலுவான வேளாண் ஆய்வு அமைப்பு மற்றும் விரிவாக்கப்பணி அமைப்பு உள்ளிட்ட பசுமை புரட்சி கொள்கைகளின் திட்டமிடுதலிலும், அமலாக்கத்திலும் பெரும் பங்காற்றியவர்.  கோதுமை, அரிசி உணவு தானிய உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்தவர். இந்தியாவில் பட்டினியைப் போக்கும் ஒரே வழி நிலையான வேளாண்மையை ஏற்படுத்துவது என்று பிரகடனம் செய்தவர்.

தேசிய விவசாயிகள் ஆணைய தலைவராக இருந்த போது, இடுபொருட்கள் உட்பட விவசாயிகளுக்கு ஆகும் மொத்த உற்பத்திச் செலவுடன் 50 சதவிகிதம் கூடுதலாக வைத்து (மொத்தத்தில் ஒன்றரை மடங்கு உற்பத்தி செலவு) குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டுமென பரிந்துரைத்தவர். புதுதில்லியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தில் இது முக்கியமான கோரிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மோடி அரசாங்கம் இதுவரை செயல்படுத்தவில்லை. உலக அளவில் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்களில் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, மத்திய வேளாண் துறை தலைவர், திட்டக்குழு உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் என பல பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர். நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி கட்டுரைகளை, நூல்களை எழுதியுள்ளவர். வால்வோ விருது, ராமன் மகசேசே விரு, உலக உணவு பரிசு, பத்மவிபூசன் விருது உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று உலக அரங்கில் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தவர். வயது மூப்பு காலத்திலும் தனது ஆராய்ச்சி பணியை தொய்வில்லாமல் மேற்கொண்டவர்.

வேளாண் துறை ஆராய்ச்சிக்கு பேரிழப்பு

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவி இந்திய விவசாயத்தில் பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருவதும் - உலக அளவில் இந்நிறுவனம் பெரிதும் பாராட்டுக்களைப் பெறுவதும் இவரது முயற்சிக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகும். அவரது மறைவு உலக அளவில் வேளாண் துறை ஆராய்ச்சிக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது குடும்பமே பொதுவாக சமத்துவ, முற்போக்கு விழுமியங்களில் நம்பிக்கையுள்ள குடும்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது மகள்கள் சௌமியா சுவாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யா சுவாமிநாதன் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எம்.எஸ். சுவாமிநாதனின் இயற்பெயர் மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன் என்பதாகும். 1925-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று தமிழ்நாட்டின் கும்பகோணம் டாக்டர் எம்.கே. சாம்பசிவம் - பார்வதி தங்கம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்த சுவாமிநாதன், கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பையும், திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை பட்டப் படிப்பையும் பெற்றார். தந்தை மருத்துவர் என்பதால், இவரும் மருத்துவராகி, தந்தையின் மருத்துவமனையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது பெற்றோரின் ஆசை. ஆனால், வங்கத்தில் 1942-இல் ஏற்பட்ட பஞ்சம் இவரை மிகவும் பாதித்தது. வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தார். கோவை வேளாண் கல்லூரி யில் இளநிலைப் பட்டமும், தில்லியில் மரபணு பயிர்கள் குறித்த படிப்பில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். 1948-இல் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். ஆனால், ஐபிஎஸ் பணியில் சேராமல், பல ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தும், 1954-இல் நாடு திரும்பி, ஒடிசா மாநிலம் கட்டாக்கில் வேளாண்துறையில் பணியாற்றினார்.  1960-களில் உணவுப் பஞ்சம் ஏற்பட்ட போது அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. ‘இந்தியர்களால் உணவு உற்பத்தி செய்ய முடியாது. பசியால் கொத்துக் கொத்தாக உயிரிழப்பார்கள்’ என்று பல நாடுகள் கூறின. இதை பொறுத்துக் கொள்ள முடியாத இவர், ஜப்பானில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியா வில் அறிமுகம் செய்து, அதிக உற்பத்தியையும், 200 சதவிகித லாபத்தையும் சாதித்துக் காட்டி னார். இதை ‘கோதுமைப் புரட்சி’ என்று பிரதமர் இந்திரா காந்தி பாராட்டினார். சீன நெல் வகைகளை அறிமுகம் செய்து  நெல் விளைச்சலிலும் இந்தியாவை தன்னி றைவு பெறவைத்தார். அதிக விளைச்சல் திறனு டன், நோய் தாக்குதல்கள் அற்ற அரிசி வகை களை உருவாக்கியவர்.

 உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலை மாறி, வேளாண் உற்பத்தி பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலை யை உருவாக்கினார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தலைவராக 1972 முதல் 1979 வரை செயல்பட்டுள்ளார். வேளாண்துறை செயலாளர், மத்திய திட்டக்குழு துணைத் தலைவ ராக இருந்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங் களவை உறுப்பினர் பதவியும் வகித்துள்ளார். ‘பட்டினி இல்லாத இந்தியாதான் என் கனவு’ என்று அடிக்கடி கூறும் எம்.எஸ்.சுவாமி நாதன், தனது பெயரில் 1988-இல்  ஆராய்ச்சி  அறக்கட்டளையை நிறுவினார். தங்களின் குடும்பத்திற்குச் சொந்தமான 2000 ஏக்கர் நிலத்தில் மூன்றில் ஒரு பகுதியை,  வினோபாபாவே-யின் பூமி தான இயக்கத்தின் படி நன்கொடையாக வழங்கினார். கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண்  ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக் கழகத்தின் ‘வால்வோ’ விருது, ராமன் மகசேசே  விருது உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற வர். உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக்கழ கங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. இவ்வாறு வேளாண் துறையில் மறுமலர்ச்சி யை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்த எம்.எஸ். சுவாமிநாதன் 98 ஆவது வயதில் கால மானார். கேம்பிரிட்ஜில் தன்னுடன் பயின்ற மீனா என்பவரை 1951-ஆம் ஆண்டு மணந்துகொண் டார். எம்.எஸ். சுவாமிநாதன் - மீனா தம்பதிக்கு சவுமியா சுவாமிநாதன் (குழந்தை மருத்துவர்), மதுரா சுவாமிநாதன் (பொருளாதார நிபுணர்) மற்றும் நித்யா சுவாமிநாதன் (பாலினம் மற்றும் கிராமப்புற மேம்பாடு) என மூன்று மகள்கள் உள்ளனர்.