tamilnadu

குடவாசல் பேரூராட்சியை கண்டித்து சிபிஎம் முற்றுகைப் போராட்டம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தையால் ஒத்திவைப்பு

திருவாரூர், ஜுன் 23-  திருவாரூர் மாவட்டம் குடவாசல் தேர்வுநிலை பேரூராட்சியின் நிர்வாக முறைகேட்டால், கிடப்பில் போடப்பட்டுள்ள அனைத்து பணிகளையும் உடனே நிறைவேற்ற வேண்டியும், மக்கள் நலம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடவாசல் நகர குழு சார்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.  இதில், கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. வி.பி.சிந்தன் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிடம், சைக்கிள் ஸ்டாண்ட், உணவகம் மற்றும் சமுதாய கூடத்தை டெண்டர் விட்டு, பொதுமக்கள்  பயன்பாட்டிற்கும் கொண்டு வர வேண்டும். குறிப்பாக 15 ஆவது வார்டில் மயான கொட்டகை, சாலை, ஈமகிரியை மண்டபம், 14 ஆவது வார்டில் சுப்பன்குளம் சுற்றுசுவர், பள்ளிவாசல் அருகே உள்ள மீன் இறைச்சி அங்காடியில் ஆடு அடிக்கும் தொட்டி உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் கிடப்பில் உள்ளதை நிறைவேற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, குடவாசல் பேரூராட்சியில் முற்றுகைப் போராட்டம் திங்கட்கிழமை நடைபெறுவதாக சிபிஎம் குடவாசல் நகரக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குடவாசல் வட்டாட்சியர் ஆ. ஸ்டாலின் தலைமையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் சிபிஎம் தலைவர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.  அனைத்து கோரிக்கைகளையும் இரண்டு மாதத்தில் நிறைவேற்றி வைப்பதாகவும், டெண்டர் விடப்பட்டு கிடப்பில் உள்ள பணிகளை உடனடியாக தொடங்கிடவும், ஸ்டாலின் நகரில் சாலை மற்றும் குடிநீர் வசதிகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளித்ததன் அடிப்படையில் முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. பேச்சு வார்த்தையில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி, நகரச் செயலாளர் டி.ஜி. சேகர், மாவட்டகுழு உறுப்பினர் ஆர். லெட்சுமி மற்றும் நகரக்குழு உறுப்பினர்கள், கட்சி கிளைச் செயலாளர்கள், வெகுஜன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.