கண்ணூர், ஏப்.5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது அகில இந்திய மாநாடு கண்ணூரில் தொடங்குகிறது. இதையடுத்து கேரள மாநிலம் கண்ணூர் முழுவதும் செங்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது. மாவட்டம் முழுவதும் செங்கொடிகள் பட்டொளி வீசி பறக்கிறது, மாவட்டத்தின் பல்வேறு சாலைகளில் வழி நெடுக அழகிய ஒவியங்கள் மிளிர்கிறது. கிராமங்கள், நகரங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள், தியாகிகள் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. கண்ணூர் நகர வீதிகளில் உள்ள சுவர்கள் மாநாட்டுச் செய்திகளை பறைசாற்றுகின்றன. ஒவ்வொரு கிராமமும், நகரமும் திருமண நிகழ்வு நடைபெறும் வீடுகள் போன்றும், கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடுவது போலவும், ரம்ஜானை வரவேற்பது போலவும் காட்சியளிக்கின்றன. வேறு எந்தக் கட்சியும் கனவில் கூட நினைக்காத வகையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளது. இந்த ஏற்பாடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே செய்ய முடியும். கண்ணூர் மாவட்டத்தின் கிராமங்களுக்கு இரவு நேரத்தில் சென்ற போது ஏதாவது ஒரு வகையில் 23-ஆவது அகில இந்திய மாநாட்டை கிராமங்களில் மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்தனர். இது ஒரு வரலாற்று மாநாடு. 23-ஆவது அகில இந்திய மாநாடு வெல்லட்டும் என்ற முழக்கங்களை கிராமங்களில் கேட்க முடிந்தது.