tamilnadu

சார்லபள்ளி - குமரி வாராந்திர சிறப்பு ரயில் கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக இயக்கம்

சார்லபள்ளி - குமரி வாராந்திர சிறப்பு ரயில் கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக இயக்கம்

கும்பகோணம், மார்ச் 20-  செகந்தராபாத் அருகில் உள்ள சார்லபள்ளி முனையத்தில் இருந்து, கும்பகோணம் தஞ்சாவூர் வழியாக கன்னியாகுமாரி வரை ஏப்ரல் மாதம் முதல், ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது . நாகர்கோவிலுக்கு நீட்டிக்கப்பட உத்தேசிக்கப்பட்டு இருந்த ஹைதராபாத் தாம்பரம் இடையே இயங்கும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலை கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக இயக்க தெலுங்கானா மாநில தமிழ் சங்கம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் ஆகிய அமைப்புகளும், அப்போதைய மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கமும் கோரிக்கை விடுத்து வந்தனர். அண்மையில், பல்வேறு அரசியல் கட்சியினர் தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க உறுப்பினர் ரேவந்த் குமார், இது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் நேரில் வலியுறுத்தினர். சார்லபள்ளியில் இருந்து கோரப்பட்டுள்ள வழித்தடத்தில் புதிய ரயில் இயக்க பரிசீலிப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் உறுதி அளித்தார்.  இந்நிலையில், தற்போது செகந்திரபாத் அருகில் உள்ள சார்லபள்ளியில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக கன்னியாகுமரி வரை ஒரு புதிய வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த புதிய ரயில் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் புதன்கிழமை தோறும் சார்லப்பள்ளியில் இருந்து இரவு 11.50-க்கு புறப்படும். இந்த ரெயில் குண்டூர், தெனாலி, நெல்லூர், ரேணிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை  வழியாக கும்பகோணத்திற்கு மறுநாள் மாலை 5 மணிக்கும் தஞ்சாவூருக்கு 5.42 மணிக்கும் வந்து, அங்கிருந்து திருச்சி மதுரை திருநெல்வேலி நாகர்கோயில் வழியாக வெள்ளிக்கிழமை அதிகாலை 2.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறு மார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு, தஞ்சாவூருக்கு பகல் 1.00 மணிக்கும் கும்பகோணத்திற்கு பகல் 2.00 மணிக்கும் வந்து, அதே வழியாக சனிக்கிழமை காலை 11.40 மணிக்கு சார்லபள்ளி  சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த ரயில் இயக்கத்தின் மூலம் டெல்டா மாவட்ட பயணிகள் திருவண்ணாமலை, வேலூர், திருத்தணி மற்றும் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா (திருப்பதி), நெல்லூர், ஓங்கோல், தெனாலி, குண்டூர், நால்கொண்டா, சார்லபள்ளி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வசதியாக இருக்கும் என ரயில் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.