tamilnadu

img

ஆயுத பூஜை - ஆர்.பத்மகுமாரி

விடிந்தால் ஆயுத பூஜை. அம்மா ஒரு அலுவலகத்தில் கூட்டி துடைத்து சுத்தம் செய்யும் வேலை செய்கிறாள். நாளை செல்வியையும் பூஜைக்கு அழைத்துக் கொண்டு போவதாக அம்மா சொல்லி இருக்கிறாள். செல்விக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. பல தடவை செல்வி அம்மாவுடன் அந்த அலு வலகத்துக்கு போயிருக்கிறாள். ஆனாலும் நாளைக்கு போகும்போது அவள் பட்டு பாவாடை யும் சட்டையும் போட்டுக் கொண்டு போகலாம் என்று அம்மா சொல்லி இருந்தாள். அதை நினைத்து தான் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது ராத்திரி தூக்கம் கூட வரவில்லை. அக்கா வேலை செய்யும் வீட்டு முதலாளி  அம்மா அவளுடைய பேத்தியின் பழைய பட்டு பாவாடையும் சட்டையும் கொடுத்திருந்தாள். மாம்பழ நிறத்தில் அரக்கு சிகப்பு ஜரிகை பார்டர்  போட்ட பாவாடை, அதற்கு மேலே போட அரக்கு  கலர் சட்டை அது கொஞ்சம் பெரிதாகத்தான் இருந்தது. அதை எப்படியாவது சரி செய்து போட்டு விடுவதாக அக்கா சொல்லி இருக்கி றாள்.  அக்கா சொன்னபடியே நாடா கட்டும் பகுதி யில் பாவாடையை இடுப்பில் சுருட்டி விட்டாள்.  மேல் சட்டையை இன்னும் இரண்டு மூன்று ஊக்கு கள் குத்தி போட்டு விட்டாள். வாசலில் பூத்திருந்த  அடுக்கு செம்பருத்தி பூவை பறித்து தலையிலும்  சூட்டி விட்டாள் செல்விக்கு தலைகால் புரிய வில்லை. துள்ளி குதித்துக் கொண்டு அம்மா வுடன் கிளம்பினாள்.

அம்மா அலுவலகத்திற்குள் சென்று தரை யெல்லாம் கூட்டிப் பெருக்கி கொண்டிருந்தாள். செல்வியும் அம்மாவுக்கு உதவியாக கூட்டு வதற்கு விளக்குமாறு எடுத்துக் கொண்டு வந்தாள். அது அவள் கைகளுக்குள் அடங்க வில்லை. எனவே தனது இரண்டு பிஞ்சுக் கைகளி லும் விளக்குமாறை சேர்த்துப் பிடித்துக் கொண்டு  கூட்டினாள். உள்ளே கூட்டி முடித்துவிட்டு அலுவல கத்தில் வெளி வாசலையும் அம்மா பெருக்கி  கோலம் போடவும் செல்வி உதவி செய்தாள். அதற்குள் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்  ஒவ்வொருவராக எல்லோரும் வந்து விட்டனர்.  செல்வி அடிக்கடி அம்மாவுடன் இந்த அலுவல கத்திற்கு வந்திருந்ததால் எல்லோரையும் அத்தை, மாமா என உறவு சொல்லித்தான் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். ராஜா மாமா அலுவலக மேஜை நாற்காலி களுக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொண்டி ருந்தார். கீதா அத்தை தோரணங்கள் கட்டிக்  கொண்டிருந்தாள். ஒவ்வொருவரும் பூஜைக்கான வேலைகள் செய்து கொண்டி ருந்தார்கள். குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டு, செல்வி இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். மேனேஜர் அறையில் ஒரு ஓரத்தில் இருக்கும்  மேஜையில் விஜயா அத்தை ஒரு சாமி படத்தை  எடுத்து வைத்தாள். பெரிய நோட்டு புத்தகங்களை கொண்டு வந்து வைத்தாள்‌. பின்புஒரு கம்ப்யூட்டரையும் சாமி படத்துக்கு பக்கத்தில் கொண்டு வந்து வைத்தாள்‌. ஒரு  வாழை இலையை விரித்து வைத்து அதில்  பொரிகடலை, வெல்லம், லட்டு, ஜிலேபி, ஆப்பிள் பழம், கொய்யாப்பழம், வாழைப் பழம், தேங்காய் என எடுத்து வைத்தாள்‌. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த செல்விக்கு பூஜையில் எதற்காக நோட்டு புத்தகங்கள், கம்ப்யூட்டர் எல்லாம் வைக்கி றார்கள் என சந்தேகம் வந்துவிட்டது. உடனே  அவள் விஜயா அத்தையிடம் ஓடி, “அத்தை கம்ப்யூட்டர் நோட்டெல்லாம் எதுக்கு பூஜையில் வச்சு இருக்கீங்க”எனக் கேட்டாள்‌.

“இன்றைக்கு ஆயுத பூஜை. நாம என்ன பொருளை எல்லாம் பயன்படுத்தி வேலை செய்கி றோமோ அதையெல்லாம் வைத்து சாமி கும்பிட ணும். அப்பதான் நாம செய்ற வேலை எல்லாம்  சிறப்பா இருக்கும்” என்று விளக்கம் சொன்னார்‌. இதற்குள் அலுவலகத்தில் எல்லோரும் பூஜைக்கு தயாராக அலங்கரிக்கப்பட்ட மேஜையை சுற்றி வந்து நின்றார்கள்.  அப்போது செல்வி அலுவலகத்தின் பின்பக் கத்திற்கு குடுகுடுவென ஓடினாள். திரும்பி வரும்போது ஒரு விளக்குமாறை தூக்கிக் கொண்டு வந்து, யாருமே எதிர்பார்க்காத வண்ணம் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்த மேஜைக்கு பக்கத்தில் வைத்தாள். இதைப் பார்த்து திடுக்கிட்ட செல்வியின் அம்மா ‘என்ன  வேலை செய்ற இந்த விளக்குமாற எடுத்துட்டு போ’ என்று அவளை அடிக்க கையை ஓங்கி னாள்.  அதற்கு செல்வி “இவங்க எல்லாரும் வேலை  செய்ற கம்ப்யூட்டர் நோட்டெல்லாம் வைத்து  பூஜை செய்றாங்க. இப்படி பூஜை செய்தால் தான் நாம செய்ற வேலை சிறப்பா இருக்கும்னு விஜயா அத்தை சொன்னாங்க. நீ இந்த விளக்கு மாறை வச்சு தானே ஆபீஸை கூட்டி சுத்தம்  செய்கிற வேலையை பார்க்கிறே. விளக்குமாறு தான் நீ வேலை செய்யும் பொருள். அப்படின்னா  விளக்குமாறையும் பூஜையில் வைக்கணும் தானே” எனக் கேட்டாள். “ஏய் வாயாடி. எங்க வந்து என்ன பேச்சு பேசுற” என கத்திக்கொண்டே செல்வியை அடிக்கப் பாய்ந்தாள் அம்மா. அதற்குள் செல்வி அலுவல கத்திற்கு வெளியே ஓடிவிட்டாள். பூஜைக்காக நின்று கொண்டிருந்தவர்கள் என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.