tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

போதை பொருட்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு 

அறந்தாங்கி, ஜுன் 26-   செலக்சன் பள்ளியில், போதைப் பொருட்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல். என்.புரம் செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தாளாளர் சி. கன்ணையா தலைமையில் நடைபெற்றது. காவல் ஆய்வாளர் செந்தூரபாண்டியன் முன்னிலை வகித்தார், காவல் துணை கண்காணிப்பாளர் எஸ். ரவிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதைப் பொருட்களின் தீமைகள் பற்றியும் அதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கருத்துக்களையும் எடுத்து கூறினார்.  மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட அனைவரும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக பள்ளி முதல்வர் க. சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக பூரணி உடையாளி நன்றி கூறினார்.

ஏவிசி கல்லூரியில் போதை ஒழிப்பு  விழிப்புணர்வு பேரணி 

மயிலாடுதுறை, ஜுன் 26-  மயிலாடுதுறை மாவட்டம் மன்னம் பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். நாகராஜன் தலைமைவகித்தார். சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசரும், ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான கே. வெங்கடராமன் கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் 200-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று போதை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனர். பின்னர், கல்லூரியில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி சென்றனர்.  இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி. முருகேசன் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

போதைப் பொருட்கள் பயன்பாட்டுக்கு  எதிரான உறுதி மொழி 

பாபநாசம், ஜுன் 26-  போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான உறுதி மொழி மேற்கொள்ளப் பட்டது.  பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் போதை பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான உறுதிமொழியேற்றனர். இதில், பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், உதவி தலைமை ஆசிரியர் காந்தி, என்.சி.சி அலுவலர் சரவணன், உடற்கல்வி இயக்குநர் பாலச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியர் செல்வக்குமார், என்.எஸ்.எஸ் அலுவலர் முருகன் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

பேராவூரணி பகுதி அரசுப் பள்ளிகளின்  விடுதிகளுக்கு மாணவ, மாணவிகள் தேர்வு 

தஞ்சாவூர், ஜுன் 26-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த, பேராவூரணி தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளின் விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு, தஞ்சை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.  இதில், பேராவூரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், சமூக ஆர்வலர்கள், கமிட்டி உறுப்பினர்கள், பேராவூரணி பகுதியைச் சேர்ந்த 10 விடுதிகளின் காப்பாளர், காப்பாளினிகள் கவிதா, கலைச்செல்வி, மைதீன், யோகேஸ்வரன், ஆனந்தன், ராமன், ஸ்டீபன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதில் மாணவ, மாணவியர் விடுதிக்கு விண்ணப்பித்தவர்களில் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.