“ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வயதோ அல்லது மற்ற சூழ்நிலையை காரண மாக கொண்டு நமக்குள் இருக்கும் கனவை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது. சாதிப்பதற்கான சந்தர்ப்பத்தை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை அரும்பு மொட்டு நிரூபித்துக் காட்டி இருக்கிறது”. நமது பாரம்பரிய கலைகளில் சிலம்பாட்டம் மிகவும் நுட்ப மானது. அந்த கலையை கற்றுக் கொள்ளும் வயது பொது வாக ஏழு முதல் எட்டு என்பார்கள். அதுவும் 15 வயது வரைக்கும் ஆசான் (பயிற்சியாளர்) கண்காணிப்பில் நடத்தப்படும் பயிற்சிகளுக்கு பிறகு, சுமார் ஐந்து வருடங்கள் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளும் பயிற்சிகள் நேர்த்தியான சிலம்ப பிரயோகத்தை பெற்றுத் தரும் என்றும் கூறுவார்கள். கராத்தே, குங்ஃபூ என வெளிநாட்டு தற்காப்பு கலைகளை வியந்து பார்க்கும் நம்மவர்கள், நம்மிடையே தோன்றி தூர தேசங்கள் எல்லாவற்றையும் கவர்ந்ததை பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது நிகழ்காலத்தின் அவலம். போர்க்களங்களில் தாய் நாட்டை அந்நியர்களிடமிருந்து பாதுகாத்த வீரர்களின் கலை இன்று கோவில்களில், திருவிழாக்களில் கண்டு களிக்கும் கண்காட்சியாக மாறிப் போயுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை மாநகரில் சிலம்பத்தில் கலக்கி வருகிறது ‘இளம் துளிர்’.
கலைக் குடும்பம்!
அசோக் நகரில் வசித்து வரும் ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி- அங்கன்வாடி ஆசிரியை முனீஸ்வரியின் கடைக்குட்டி ஷக்ஸிடா. தி.நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மழலையர் வகுப்பில் படித்து வருகிறார். பொழுது போக்குக்காக கையில் எடுத்த கம்பு சிலம்பமாக சுழல்கிறது இப்போது! அங்கன்வாடி ஊழியர் சங்கத்தில் சென்னை மாவட்ட நிர்வாகிகளில் ஒருவரான முனீஸ்வரி அழிந்து கொண்டு வரும் தமிழர்களின் வீர கலைகளை எப்படியும் மீட்டெடுக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாகவும் இருந்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே தனது குடும்பத்தை பயிற்சி களமாக மாற்றி காட்டி வருகிறார். பதினோராம் வகுப்பு படித்து வரும் மூத்த மகள் ஹரிணியை முதன்முதலாக சிலம்ப பயிற்சிக்கு அனுப்பினார். அடுத்ததாக, எட்டாம் வகுப்பு படித்து வரும் இரண்டாவது மகள் ஷிவானியும் சிலம்பத்தை தொடர்ந்தார். பத்து மணி நேரம் ‘சுருள்’ சுற்றி நோபல் ரெகார்ட் செய்தார். மூன்றாவது மகளான ஷக்ஸிடாவை இரண்டரை வயதில் சிலம்பம் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். அசோக் நகர் பகுதியில் உள்ள ‘சிகரம் சீரும்’ சிலம்பாட்ட கலைக்கூடத்தில் பயிற்சியை துவக்கினார். அங்கு, அடி வரிசை முதல் சிலம்பாட்ட வீச்சு வரையும் சிறுவயதிலேயே அதிக ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார்.
உலக சாதனையில் சென்னை!
குத்து வரிசை, தெறி குச்சி, வாள் வீச்சு, கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம், களரி, பானையின் மேல் நின்று சிலம்பம், நெருப்பு வளையம் சிலம்பு, மிதிவண்டியில் ஒற்றைக் கம்பில் சிலம்பம் உள்ளிட்ட 35 வகையான சிலம்பாட்டங் களை அசோக் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான விளை யாட்டு மைதானத்தில் ஏராளமான சிலம்பக் கலை ரசிகர்கள், பயிற்சியாளர்கள், வீரர்கள், யுனிவர்சல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ப்யூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத் தலைவர் பாபு பாலகிருஷ்ணன் முன்னிலையில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் சிலம்பக் கலையின் தனது அபார திறமைகளை வெளி உலகத்திற்கு நிரூபித்து காட்டி சாதனையும் படைத்தார் ஷக்ஸிடா. சிலம்பம் கலையில் இதற்கு முன்பு 10 வயது சிறுமி செய்த சாதனையை ஐந்து வயதில் முறியடித்து உலக சாதனை படைத்திருக்கும் ஷக்ஸிடாவிடம் மேலும் அபாரமான திறமைகளை எதிர்பார்க்க முடியும் என்று பாராட்டிய புக் ஆப் யுனிவர்சல், ப்யூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனங்கள் தங்கப்பதக்கமும், பாராட்டு சான்றும் ‘நாளைய கலாம்’ விருதும் வழங்கின. சென்னை குமரன் நகர் காவல் நிலைய சிறுவர் மன்றம், மாநகராட்சி நிர்வாகமும் பாராட்டி கேடயமும் வழங்கி இருக்கிறது.
இளம் வயது டாக்டர்!
தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தில் மஞ்சள், ஆரஞ்சு, பச்சை பட்டங்களை ஐந்து வயதிலேயே முடித்து மிக விரைவில் மாநில,தேசிய அளவிலான போட்டிகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் ஷக்ஸிடாவுக்கு சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் கடந்த மாதம் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் “டாக்டர் பட்டம்” வழங்கி கவுரவப் படுத்திருக்கிறது.
விடாமுயற்சியும்-கடின உழைப்பும்...
எங்களது குடும்பம் சாதாரண குடும்பம் என்றாலும், பாரம்பரிய கலைகள் மீதான ஆர்வத்தில் மகளுக்கு பயிற்சி கொடுப்பது மட்டுமல்ல போட்டிகளில் பங்கேற்பதற்கான போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து செலவையும் கடன் வாங்கித் தான் சமாளிக்கிறோம் என்கின்றனர் ஷக்ஸிடாவின் பெற்றோர். சாதனை படைக்க வயது தடையில்லை. விடா முயற்சியும் பயிற்சியும் தைரியம் மட்டும் இருந்தால் போதும் அதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஷக்ஸிடாவின் வெற்றிகள் தொடர அனைவரும் வாழ்த்துவோம்!
- சி.ஸ்ரீராமுலு