tamilnadu

img

அரசாணை 318 ஐ செயல்படுத்திட சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திடுக!

மயிலாடுதுறை, ஜூன் 7-  அரசாணை 318 ஐ செயல்படுத்திட  தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாநில மாநாடு அரசை வலியுறுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் தமிழ்நாடு அனைத்து சமய  நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் முதல் மாநில மாநாடு திங்களன்று மாலை பேரணி, பொதுக்கூட்டத்துடன் துவங்கியது. மறுநாள் செவ்வாயன்று பிரதிநிதிகள் மாநாடு அமைப்பின் மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புக்குழு தலைவர் எஸ்.துரைராஜ் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர்  பி.டில்லிபாபு மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். வேலை அறிக்கையை மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் வாசித்தார். தீர்மானங்களை நெ.இல.சீதரன், எஸ்.ஜெயராமன், வ.செல்வம், த.இராயர், சா.ஜீவபாரதி, கே.சி.பாண்டியன் ஆகியோர் முன்மொழிந்தனர். அரசாணை 318 ஐ உடன் செயல்படுத்திட தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,  சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் சட்டப்பிரிவு 78, 79,79 பி ஆகியவற்றை நீக்க வேண்டும், குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குத்தகை பதிவு உரிமை வழங்க வேண்டும், இயற்கை  நியாயத்திற்கு சட்டப்பிரிவு 34 ஏ,பி,சி,டி  ஆகியவற்றை நீக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொகுப்புரைக்கு பிறகு மாநிலக்குழு, மாநில நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

சங்கத்தின் மாநில முதல் செயலாளராக சாமி.நடராஜன், தலைவராக வ.செல்வம், பொருளாளராக எஸ்.துரைராஜ், துணைத் தலைவர்களாக நெ.இல.சீதரன், எஸ்.ஜெயராமன், சா.ஜீவபாரதி, கே.சி.பாண்டியன், துணைச் செயலாளர்களாக குணசேகரன், ஜி.துரைராஜ், ஆர்.சபாபதி, எஸ்.ஹேமாவதி ஆகியோர் உள்ளடக்கிய 41 பேர் கொண்ட புதிய மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் நிறைவுரையாற்றினார். வரவேற்பு குழு செயலாளர் ஏ.ஆர்.விஜய் நன்றி கூறினார்.                   

பேரணி, பொதுக்கூட்டம்

முன்னதாக திங்களன்று பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற கோரிக்கை பேரணியை கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி துவக்கிவைத்தார். அண்ணாசிலை, கிட்டப்பா அங்காடி, மணிக்கூண்டு, பட்டமங்கலத்தெரு, சின்னக்கடைத்தெரு, தரங்கை சாலை வழியாக கோரிக்கைகள் தாங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியவாறு பொதுக்கூட்டம் நடைபெற்ற கச்சேரி சாலை கோட்டாட்சியர் அலுவலகம் முன் வந்தடைந்தது. அங்கு மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் பேசும் பொழுது,

“ஆக்கிரமிப்பாளர்கள் யார் என்று அடையாளப்படுத்தப்படும் பயனாளிகள் மீது யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். அதன் மீது அவர்களை கைது செய்து ஜாமீனில் வரமுடியாதபடி சிறையில் அடைக்கலாம் என்று உள்ள 78,79, 79 பி திருத்த சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.  திமுக அரசு ஏராளமான நல்ல காரியங்களை தனது ஆட்சிக்காலத்தில் செய்திருக்கிறது. திமுக தலைவர் கலைஞர் தனது வாழ்நாள் சாதனையாக சமத்துவபுரம் அமைத்ததை பெருமையாக குறிப்பிடுவதைப்போல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோயில் இடங்களில் குடியிருப்போருக்கு அந்த இடங்களை சொந்தமாக்கி சாதனை படைத்து என்ற நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டும். அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளிலும் ஈடுப்பட வேண்டும். நாம் இந்த அமைப்பை 2018இல் துவக்கி நான்காண்டு காலமாக நடத்திய பல்வேறு போராட்டங்களுக்கு பிறகாகத்தான் அரசாணை 318 வந்தது. தொடர்ச்சியாக நாம் நடத்திய போராட்டத்தால் தான் வாடகை குறைப்பு போன்ற விஷயங்களெல்லாம் வந்துள்ளது. நம்முடைய அமைப்பு வலுப்பெற்று சம்பந்தப்பட்ட மக்களெல்லாம் நம் அமைப்பின் பின்னால் ஒன்று திரண்டால் நிச்சயமாக  கோரிக்கைகளில் 100 சதவீதம் வெற்றி பெற முடியும் என்று பேசினார். மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நூல் வெளியீடு

பொதுக்கூட்டத்தில்  “அறநிலையத்துறையும் மக்களும்” என்ற தலைப்பிலான நூல் வெளியிடப்பட்டது.ஆரம்பம் முதல் தற்போதைய நிலை வரை வரலாறு,அரசாணை, மக்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் அடங்கிய இந்நூலினை மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் தொகுத்துள்ளார். சங்கத்தின் மாநில அமைப்பு குழு உறுப்பினரும் அறநிலையத்துறையின் முன்னாள் இணை ஆணையருமான எஸ்.ஜெயராமன் வெளியிட்டார். மாநில அமைப்புக்குழுவின் உறுப்பினர் தமிழ்செல்வி நூலை பெற்றுக்கொண்டார்.