சென்னை,நவ.9- சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரைப்பட நடிகர் சத்யராஜ் பேசியதாவது: திராவிடத்தை ஆரியம் எதிர்க்கலாம். ஆனால், தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிடத்தை எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது மிகவும் ஆபத்தானது. ஆரியத்துக்கு துணை போனால் மீண்டும் சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகள் என மூடநம்பிக்கைகள் மேலோங்கும். தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ள இக்காலத்தில் நமக்கு இருமொழிக் கொள்கை தான் முக்கியம். தமிழ்நாட்டுக்கு வடமாநிலத்தவர் அதிகம்பேர் வேலை பார்க்க வருகின்றனர். வட மாநிலங்களில் சாதியப் பிரச்சனை கள் அதிகம். இங்கே வேலைக்கு வரும் பெரும்பாலான வட மாநிலத்தவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே. அவர்கள் இங்கே வேலை பார்க்க வருகின்றனர் என்றால், இங்கு சாதிய ஒடுக்குமுறை இல்லை, மதக் கலவரங்கள் இல்லை. நிம்மதியாக வாழலாம் என்று வருகின்றனர். இங்கே வட மாநிலத்தவர் சிறுசிறு வேலை நிமித்தமாக அதிகமாக வருகிறார்கள் என்றால், அதற்கு இங்குள்ளவர்கள் வேலை செய்யத் தயாராக இல்லை என்று அர்த்தமில்லை, சிறிய வேலைகளைத் தாண்டி பெரிய இடத்தில் வேலை செய்யும் சூழலில் இங்குள்ளவர்கள் உயர்ந்துள்ளனர் என்றே அர்த்தம். இவ்வாறு அவர் பேசினார்.