தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!
இராமேஸ்வரம், பிப். 20 - இராமேசுவரத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்துக்காக 10 மீனவர்களை கைது செய்துள்ள நிலையில், அவர்களின் 3 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் கைதுசெய்து சிறையில் அடைத்து வருகின்றனர். மேலும், அவர்கள் செல்லும் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து நாட்டுடமையாக்கி வருகின்றனர். கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் பல லட்சம் ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு கூறி வருகிறது. தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். எனினும், உரிய நடவடிக்கை இல்லை. மீனவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான், அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குச் சென்ற இராமேசு வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!
சேலம், பிப். 20 - மேட்டூர் அணைக் கான நீர்வரத்து 167 கன அடியாக சரிந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 110 அடியில் இருந்து 109.96 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 318 கன அடியிலிருந்து வினாடிக்கு 167 கன அடியாக சரிந்துள் ளது.