பெரம்பலூர்:
ஆவின் நிறுவனத்தை பாதுகாக்கக்கோரி தமிழகம் முழுவதும் அக்.27 கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக பால் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் கே.முகமதுஅலி கூறியுள்ளார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள லெட்சுமி நினைவகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநில செயலாளர்கள் என்.செல்லதுரை, ஜி.ஆர்.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் கே.முகமதுஅலி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
தற்போது தமிழகத்தில் பால்உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். கூட்டுறவு அமைப்பாக செயல்படக்கூடிய ஆவின் நிறுவனம் நிர்வாக சீர்கேடுகளினால் கடுமையான நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான மாவட்ட ஒன்றியங்களிலும் மாநில இணையத்திலும் பால் வழங்கிய பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.500கோடிக்கும் மேல் பாக்கி வைத்துள்ளது. மேலும் தீபாவளி பண்டிகை வரவிருப்பதால் உடனடியாக பாக்கி தொகை முழுவதையும் வழங்க வேண்டும். ஆரம்ப சங்கங்களில் பால் வழங்கியுள்ள அனைவருக்கும் போனஸ் மற்றும் ஊக்கத்தொகை சேர்த்து வழங்க வேண்டும்.பல மாவட்ட ஒன்றியங்களில் சில நாட்கள் விடுமுறை விடுவதோடு ஒரு பகுதி பாலையும் வாங்காமல் திருப்பி அனுப்புவதை கைவிட வேண்டும். ஆவின் நிர்வாகத்தில் நிலவுகிற ஊழல்களை தடுத்துநிறுத்துவதோடு ஆரம்ப சங்கங்களில் பால் கொள்முதல் அளவிற்கேற்ப பணியாளர்கள் எண்ணிக்கை, சம்பள விகிதத்தைநிர்ணயிக்கிற அரசும் ஆவின் நிர்வாகமும் மாவட்ட ஒன்றியங்களிலும் மாநில இணையத்திலும் இந்தநடைமுறையை அமலாக்கவில்லை. இதைக் கண்டிப்பதோடு உடனடியாக நிர்வாகச் சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும்.
நியமனத்தில் ஊழல்
சமீபத்தில் மாவட்ட ஒன்றியங்களில் அளவுக்கு அதிகமாகஅதிகாரிகளையும் அலுவலர்களையும் நியமித்ததில் பெரும் ஊழல் நடந்துள்ளது. எனவே தமிழகஅரசு தலையிட்டு உரிய விசாரணைநடத்திட வேண்டும். ஆரம்ப சங்கங்களில் பாலுக்கு தற்போது பணம் வழங்குகிற நடைமுறையை செயல்படுத்தி மாவட்ட ஒன்றியங்கள் மூலம் வழங்குகிற முறையை கைவிட வேண்டும்.கொரோனா நோய்த்தொற்று பாதித்த கால கட்டங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கு 50 சதவீத மானிய விலையில் கால்நடை தீவனங்கள் வழங்கி பால் கொள்முதல் விலையில் ஒரு லிட்டருக்குகூடுதலாக 5 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஆரம்ப சங்கங்களில் பாலை கொள்முதல் செய்யும் போதே சத்துக்களையும் அளவையும் குறித்துக் கொடுக்க வேண்டும்.
பால் உற்பத்தியாளர்களிடம் பிடித்தம் செய்யப்படுகிற அண்ணாபொது நல நிதியை பால் உற்பத்தியாளர்களுக்கு நிவாரண உதவித்தொகையாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைப்பதோடு, திவால் நிலையிலுள்ள ஆவின் நிறுவனத்தை காக்க வலியுறுத்தி அக்.27 அன்று தமிழகம் முழுவதும் உள்ள ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஆவின் கொள்முதல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.