tamilnadu

img

கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுடன் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்திடுக - பிரதமருக்கு மத்தியத் தொழிற்சங்கங்கள் கடிதம்

புதுதில்லி, மார்ச் 27-

கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகளுடன், நாட்டின் தொழிலாளர்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும் என்று மத்தியத் தொழிற்சங்கங்களின் சார்பில் பிரதமருக்குக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச, எச்எம்எஸ் உட்பட பத்து மத்தியத் தொழிற்சங்கங்களின் சார்பில் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

கொரானா வைரஸ் தொற்றைப் பரவாமல் தடுப்பதற்காக அரசு அறிவித்துள்ள சமூக முடக்கம் அவசியம் என்று நாங்கள் கருதுகிற அதே சமயத்தில், அதற்காக நீங்கள் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கியுள்ள 15 ஆயிரம் கோடி ரூபாய் மிகவும் சொற்பத்தொகை என்றே நம்புகிறோம். இந்நோயால் பாதிப்புக்கு உள்ளான அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட வேண்டியது அவசியம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். வெண்டிலேடர்கள், முகக் கவசங்கள், கூடுதலான படுக்கை வசதிகள், தேவையான அளவிற்கு மருந்துகள், சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

இது தொடர்பாக மருத்துவ உதவியை மேற்கொண்டிருப்பவர்கள் நம் டாக்டர்கள், நர்சுகள், இதர மருத்துவப் பணியாளர்கள், ‘ஆஷா’ ஊழியர்கள், துப்புரப் பணியாளர்கள் போன்றவர்கள் முன்னணி வீரர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பு குறித்தும் நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அவர்கள் இவ்வாறு பாதுகாக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும்,  அவர்களின் பாதுகாப்புக்குத் தேவையான உபகரணங்கள் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை என்பதும், ‘எய்ம்ஸ்’ ரெசிடெண்ட் மருத்துவர்கள் சங்கம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் நர்சுகள் சங்கங்களின் முறையீடுகளிலிருந்து நன்கு தெரிகிறது. கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் பரிசோதனை செய்வதற்குப் பயன்படுத்தப்பட வேண்டிய, அத்தியாவசிய உபகரணங்கள் நம் நாட்டின் பயன்பாட்டிற்கேப் போதுமான அளவிற்கு இல்லாதிருக்கக்கூடிய நிலையில், கொரானா வைரஸ் தொற்று சம்பந்தமாக உலக சுகாதார ஸ்தாபனம் நம்மை பிப்ரவரி தொடக்கத்திலேயே எச்சரித்திருந்தபோதிலும், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாது, இவற்றை மத்திய அரசு 2020 மார்ச் 19 வரை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தது என்பதை அறியும்போது மிகவும் அதிர்ச்சியையும், திகைப்பையும் ஏற்படுத்துகிறது.

இந்தச்சூழ்நிலையில் இப்பணியில் ஈடுபட்டிருக்கும் டாக்டர்கள், நர்சுகள் முதலானவர்களை அவர்களின் குடியிருப்புகளிலிருந்து காலி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிற அவமானகரமான நடவடிக்கைகளும் வந்துகொண்டிருக்கின்றன. இதேபோன்று வெளிநாடுகளில் தவித்துக்கொண்டிருந்த இந்தியர்களை இந்தியாவிற்குக் கொண்டுவந்த ஏர் இந்தியா ஊழியர்களும் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிற அவமானகரமான நடவடிக்கைகளும் நடந்திருக்கின்றன. இவற்றை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, குற்றமிழைத்தவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். அப்போதுதான் அது, சமூகத்திற்கு ஒரு சரியான சமிக்ஞையை அளித்திடும்.

நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் எங்கள் சங்கங்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள், தங்களை அரசாங்கத்தின் இன்றியமையாப் பணிகளைச் செய்வதற்காகச் செல்லும்போது, காவல்துறையினர் அவ்வாறு செல்லவிடாது தடுக்கின்றனர் என்று புகார்கள் அளித்துள்ளனர். அவர்கள் தங்களுடைய அடையாள அட்டைகளைக் காட்டியும் பயனில்லை என்று கூறுகின்றனர்.

நாட்கூலித் தொழிலாளர்கள், கேசுவல் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள், வீதிகளில் கூவி விற்போர், ரிக்ஷா இழுப்பவர்கள், ஆட்டோ/டாக்சி ஓட்டுநர்கள், டிரக் ஓட்டுநர்கள், உதவியாளர்கள், கூலிகள், போர்ட்டர்கள், சுமை தூக்குவோர், கட்டுமானத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்கள், குப்பைகளைப் பொறுக்கும் தொழிலாளர்கள் போன்று எண்ணற்றவர்கள் வேலையிழந்திருக்கிறார்கள். இவர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான வழிவகைகளைக் காணவேண்டியது அவசியமாகும். இவர்களுக்குத் தேவையான அளவு நிதி உதவி செய்திட வேண்டும். இலவச ரேஷன் அளித்திட வேண்டும். இலவச சமையல் எரிவாயு அளித்திட வேண்டும். அத்தியவாசியப் பொருள்கள் பொது விநியோக முறையில் அளித்திட வேண்டும். பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் ஐயாயிரம் ரூபாய் உடனடியாக அளித்திட வேண்டும். மகாத்மாகாந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழான தொழிலாளர்களுக்கும் இடைக்கால நிவாரணமாக நிதி உதவி அளித்திட வேண்டும்.

வேளாண் பொருள்கள் மற்றும் பண்ணைப் பொருள்கள் பல அழுகக்கூடியவை மற்றும் விரைவில் கெட்டுப்போகக் கூடியவை. எனவே இவற்றை மாநில அரசாங்கங்கள், நேரடியாக கொள்முதல் செய்து, மக்களுக்கு நேரடியாக விநியோகித்திட வேண்டும்.

மத்திய நிதியமைச்சரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார பணிக்குழு (Economic Taskforce) ஐடீ ரிடர்ன்கள், ஜிஎஸ்டி, டிடிஎஸ் போன்றவற்றிற்கு கால நீட்டிப்பு செய்திருப்பதில்தான் சுறுசுறுப்பாக இருக்கிறதேயொழிய, நாட்டிலுள்ள 54 கோடி உழைக்கும் மக்களில் 40 கோடி மக்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகி இருப்பது குறித்து, கிஞ்சிற்றும் கவலைப்படாதது திகைப்பை ஏற்படுத்துகிறது.

நாட்டின் பல பகுதிகளிலும் தனியார் துறையினர் தங்களின் கீழ் வேலைபார்த்து வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள், கேசுவல் தொழிலாளர்கள், தற்காலிகத் தொழிலாளர்கள், தொகுப்பூதியத் தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு இவர்கள் செய்யக்கூடாது என்று அரசாங்கத்தின் தரப்பில் வேண்டுகோள் விடுத்தால் மட்டும் போதாது. இதனைத் தடுத்திட சட்டபூர்வமாகவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

கோவிட்-19 என்னும் கொரானா வைரஸ் தொற்றை முறியடித்திடவும், இதனால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள உழைக்கும் மக்களைப் பாதுகாத்திடவும் அரசாங்கம் குறைந்தபட்சம் 5 முதல் 7 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பை ஏற்படுத்தி, உடனடியாக அறிவித்திட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

இவ்வாறு மத்தியத் தொழிற்சங்கங்கள் பிரதமருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

(ந.நி.)