ஐதராபாத்:
ஐதராபாத் நகரம் வெள்ளத்தால் பெரும் இழப்பை சந்தித்த போதும் கூட மத்திய மோடி அரசு உதவிக்கரம் நீட்டவில்லை என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ‘சமீபத்திய மழை மற்றும் வெள்ளத்திற்கு மத்திய அரசின் உதவி’ என்ற தலைப்பில் மறு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலஅதிகாரிகள் கலந்துகொண்டு முதல்வர் சந்திரசேகர ராவுடன் கலந்துரையாடினர்.
வெள்ளப்பாதிப்புக்கு உடனடி நிவாரணமாக 1,350 கோடி ரூபாய் கோரியதையும் ஆனால் இன்றைய நாள்வரை மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை என்றும் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ளம் குறித்து குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் பிரதமர்ஆகியோர் தங்கள் அனுதாபத்தை வெளிப்படுத்தினர். மத்தியக் குழுவும் மாநிலத்திற்கு வருகை தந்து நிலைமையை மதிப்பீடு செய்தது. ஆனால் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்த மத்திய அரசு அவ்வாறு எதுவும் செய்யவில்லை. மத்திய அரசு வெற்று வாக்குறுதிகளை அளிக்கிறது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள்எங்கள் மாநிலத்தில் வெள்ள நிவாரணத் திற்காக எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை.பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் மாநிலத்தால் பெரும் இழப்புகள் ஏற்பட்ட போதிலும், இந்த விஷயத்தில் ஒரு ரூபாயைக்கூட உதவியாக வழங்கத் தவறிய மத்திய அரசின் அணுகுமுறை அம்பலமாகியுள்ளது.ஐதராபாத் போன்ற ஒரு நகரம் பெரும் இழப்பைச் சந்தித்தபோதும் மத்திய அரசு உதவிக்கரம் நீட்டவில்லை என்பது மிகவும்வருந்தத்தக்கது. இவ்வாறு அவர்தெரிவித்தார்.