புதுதில்லி:
அடுத்த 2 மாதங்களில் பண்டிகைகள்,குளிர்காலம் வருவதால் கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் தகுந்தமுன்னெச்சரிக்கையுடன் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் அறிவுறுத்தியுள்ளார்.கொரோனா தொற்று இந்தியா மற்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் அடுத்துவரும் குளிர்கால மாதங்கள், பண்டிகை காலத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குளிர்காலத்தில் கொரோனா வைரஸ்பரவல் காற்றில் நீண்டநேரம் நிலைத்திருக்கும் என்பதால் தொற்று பரவுவதற்கானசாத்தியம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 3 தடுப்பு மருந்துகள் தயாராகி வருகின்றன. இதில் ஒரு மருந்து கிளினிக்கல்பரிசோதனையில் 3-வது கட்டத்தில் இருக்கிறது. மற்ற இரு தடுப்பு மருந்துகளும் இரண்டாவது கட்டத்தில் இருக்கின்றன. இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து விரைவில் மக்களுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.கொரோனாவுக்கு எதிராக நாம் நடத்திவரும் போரில் அடுத்த இரண்டரை மாதங்கள் மிகவும் முக்கியமானவை. ஏனென்றால், குளிர்காலத்தில் கொரோனா பரவும் வேகம் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் பண்டிகைகாலத்தில் மக்கள் நெருக்கமாகக் கூடும்வாய்ப்பு இருக்கும். அப்போதும் கொரோனா பரவல் அதிகரிக்கலாம். ஆதலால், ஒவ்வொரு குடிமகனும் கொரோனா விதிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றி, சமூகவிலகலைக் கடைப்பிடித்து கொரோனா பரவாமல் தடுக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து நாம் நம்மைத் தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே முக்கியமானது. குறிப்பாக முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல் போன்ற நடவடிக்கைகள் அவசியம். அதிலும் சமூக விலகலைக் கடைப்பிடித்து அனைத்து இடங்களுக்கும் செல்லுதல் என்பது மிகவும் அவசியமானது. உலக அளவில் கொரோனாவில் உயிரிழப்புகளில் மிகக்குறைவாக இருக்கும் நாடு இந்தியாதான். நாள்தோறும் செய்யப்படும் பரிசோதனையின் அளவும் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக 14 லட்சம்வரை நாள்தோறும் பரிசோதனை செய்யப்படுகிறது. 9 கோடிக்கும் மேல் பரிசோதனை செய்துள்ளோம்.முக்ககவசம், பிபிஇகிட், வெண்டிலேட்டர் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து வாங்காமல் உள் நாட்டிலேயே இந்தியா தயாரிக்கிறது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.