புதுதில்லி:
பீகார் சட்டமன்றத் தேர்தலில் கொரோனா வைரஸ் தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று பாஜகதேர்தல் வாக்குறுதி அளித்திருப்பது தேர்தல் நடத்தை விதிமுறை மீறலில் சேராது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பல்வேறு வெற்று வாக்குறுதிகளை பாஜக அள்ளிவீசியுள்ளது. கொடும் நோயிலிருந்து மக்களை காப்பாற்றுவது அரசுகளின் கடமை. இதற்கான மருந்துகளை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். ஆனால் பீகார் மாநில பாஜக, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று வாக்குறுதி அளித்திருப்பது வினோதமானது என்று எதிர்க்கட்சிகள் கண்டித்தனர்.
பாஜகவின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்டஎதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது தேர்தல் நடத்தைவிதிமுறை மீறல் அறிவிப்பு, கொரோனாவை பயன்படுத்தி அரசியல் ஆதாயம்தேடும் முயற்சி. இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் புகார் கூறின.இந்நிலையில் ஆர்டிஐ ஆர்வலர் சாகேத் கோகலே, “மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது அதிகாரத்தை தவறாகப்பயன்படுத்தி பீகார் தேர்தலில் ஆதாயம் தேடப் பார்க்கிறது. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்பதுதேர்தல் நடத்தை விதிமுறைமீறல்” என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தார்.இந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தில், “தேர்தல் வாக்குறுதியில் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்ற பாஜகவின் அறிவிப்பு தேர்தல்நடத்தை விதிமுறை மீறலில் சேராது. இந்த அறிவிப்பில் எந்தவிதமான விதிமுறைமீறலும் இல்லை. தேர்தல் அறிக்கைக்கான சிலவழிகாட்டு நெறிமுறைகள், நடத்தை விதிமுறைகள் 8-ம் பிரிவில் இருக்கிறது. அந்த வகையில் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் பாஜகவின் வாக்குறுதியை விதிமுறை மீறலில் சேர்க்க முடியாது. தேர்தல் அறிக்கையில் இதுபோன்ற நலன்சார்ந்த வாக்குறுதிகளுக்கு தடையில்லை. இதுபோன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றக்கூடிய வகையில் இருந்து அதன் மூலமே வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.