tamilnadu

img

ஜம்முகாஷ்மீரில் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கிட வேண்டும் - சிபிஎம் வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஜம்மு-காஷ்மீரில் குடிமை உரிமைகள் மீது ஏவப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றம் குறிப்பிடத்தக்க விமர்சனங்களைச் செய்திருக்கிறது. இவை, அங்கே இயல்புவாழ்க்கைத் திரும்பிவிட்டதாக மத்திய அரசாங்கம் நாட்டுக்கும், உலகுக்கும் கூறிவரும் கூற்றுக்களைப் பொய் எனக் காட்டியுள்ளது.  

மத்திய அரசாங்கம், உச்சநீதிமன்றத்தீர்ப்பு வருவதற்கு சற்று முன்பு, அங்கே இயல்பு வாழ்க்கைத் திரும்பிவிட்டதாகக் காட்டுவதற்காக, அந்நியநாடுகளைச் சேர்ந்த தூதர்கள் குழு ஒன்றை அனுப்பி, அரசாங்கம் யாரைப் பார்க்க வேண்டும், யாரிடம் பேச வேண்டும் என்று விரும்பியதோ அவர்களை மட்டும் பார்க்கவும், பேசவும் நடவடிக்கைகளை எடுத்து ஒரு கேலிக்கூத்தான சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்தது. அவ்வாறு சென்ற தூதுக்குழுவினர் சிறையிலிருக்கின்ற அம்மாநிலத்தின் முதலமைச்சர்களாக இருந்த மூன்றுபேரையும் இதுவரையிலும் பார்க்கவில்லை.  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இயல்பு வாழ்க்கையை சிதைத்து, ஐந்து மாதங்கள் கழிந்தபின்னரும், காஷ்மீருக்குப் பயணம் செய்திட நாட்டிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளுக்குத் தடை நீடிக்கக்கூடிய அதே சமயத்தில், இத்தகைய தூதுக்குழு ஒன்று சென்றிருப்பது இந்திய நாடாளுமன்றத்தினை அவமதித்திடும் செயலாகும்.

உச்சநீதிமன்றம், இணையத்தைப் பயன்படுத்துவது என்பது ஓர் அரசமைப்புச்சட்ட உரிமை என்றும், பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை வெளிப்படுத்தும் ஓர் அங்கம் என்றும் கூறி, இணைய சேவைகளுக்கு காலவரையின்றி தடை விதித்திருப்பதை, விமர்சித்திருக்கிறது. மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144ஆவது பிரிவை, மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கும் ஒரு கருவியாகத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறியிருக்கிறது. இத்தகைய ஆணைகளை ஒருவார காலத்திற்குள் மறு ஆய்வு செய்திட வேண்டும் என்று கட்டளைப் பிறப்பித்திருக்கும் அதே சமயத்தில், தங்கள் கட்டளைகளால் பாதிக்கப்பட்ட குடிமக்கள் அதனை ஆட்சேபிக்கும் உரிமையைப் பெற்றிருப்பதால் அவற்றை அரசாங்கம் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.  

மத்திய அரசாங்கம் ஜம்மு-காஷ்மீரில் மேற்கொண்டுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கிட வேண்டும் என்றும், இணைய சேவைகளை மீளவும் முழுமையாக அளித்திட வேண்டும் என்றும், 144 பிரிவை ரத்து செய்திட வேண்டும் என்றும், காஷ்மீர் மக்களின் பேச்சுரிமை, கருத்துரிமைக்கான ஜனநாயக உரிமைகளை உத்தரவாதம் செய்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது.

(ந.நி.

;