புதுச்சேரி, ஆக. 12- கடந்த 24 மணி நேரத்தில் 481 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 481 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 5 பேர் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 96ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் அரசு கோவிட் மருத்துவமனைகளில் 2,616 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக 6,381 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 3,669 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும், 621 பேருக்கு கோவிட் சோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. கடந்த நான்கு நாட்களாக தொற்று அதிகரித்து வருகிறது. பக்கத்து மாநிலங்களில் வாரம் ஒரு நாள் முழ பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல புதுச்சேரியிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.