பயனில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என்று வேலூர் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியாளர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி தம்பதியின் மகன் சுர்ஜித் வில்சன். வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
குழந்தையை மீட்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து 20 மணி நேரமாக போராடி வருகின்றனர். இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள பயன்படாத, கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்து உடனடியாக மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அதே போல் தேனி மாவட்டத்தில், திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார். ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டனவா என வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.