தென்காசி மாவட்டத்தில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி பகுதியில் உள்ள கடையம் அருகே கோடை மழையால் வீடு இடிந்து தந்தை, மகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடையம் அடுத்த வாகைக்குளத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் தனது மனைவி வேலம்மாள், இளையமகள் ரேவதி ஆகியோருடன் வழக்கம்போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நேற்று மாலையில் இருந்து கடையம் பகுதியில் மழை பெய்து வந்த நிலையில், எதிர்பாராத விதமாக இரவு கல்யாணசுந்தரத்தின் வீடு இடிந்து விழுந்தது. வீடு விழுந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் கல்யாணசுந்தரம் மற்றும் அவரது இளையமகள் ரேவதி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆழ்வார்குறிச்சி போலீசார், கல்யாணசுந்தரம், ரேவதி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த வேலம்மாள் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.