தூத்துக்குடி,ஜூலை 14- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகைகள் செய்ததற்கு உரிய பணத்தை தராமல், நகை தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்ததாக தந்தை,மகனை போலீசார் தேடி வருகின்றனர். கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு கணேசன் நகரை சேர்ந்தவர் ரத்தினம் மகன் கனகசபாபதி (55). நகைத் தொழிலாளி. இவர் அதே ஊரில் தெப்பகுளத்தெருவை சேர்ந்த சங்கரன் மகன் மணிகண்டன் என்பவருக்கு சுமார் நான்கரை லட்சம் ரூபாய் மதிப்பில் நகைகள் செய்து கொடுத்தாராம். ஆனால் மணிகண்டன் நகைகள் செய்ததற்கு உரிய பணத்தை தராமல் இருந்து வந்ததாக தெரிகிறது. கனகசபாபதி இது குறித்து கேட்ட போது மணிகண்டன் மற்றும் அவரது தகப்பனாரும் சேர்ந்து கனகசபாபதியை மிரட்டியுள்ளனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.