ஏழைத் தொழிலாளர் குழந்தைகளுக்கு எட்டாக் கனியாகும் உயர் படிப்பு
கல்வி கட்டண விலக்கு அளிக்க கோரிக்கை
சீர்காழி, மே 13-தொழிலாளர் குழந்தைகளுக்கு மேல் படிப்பு படிக்க முழு கட்டண விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 12 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மேற்படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்து படிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் ஏழை- எளிய குடும்பங்களைச் சேர்ந்த விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாரிசுகள் தாங்கள் விரும்பும் பாடத் திட்டத்தில் மேல் படிப்பில் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார நிலை காரணமாக தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மேல் படிப்பு எட்டாக் கனியாகி வருகிறது. இந்நிலை நீடித்தால் பல ஆயிரக்கணக்கான ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் படிக்க வழியில்லாமல் போய் விடும். கடந்த சில வருடங்களாக கூலித் தொழிலாளர்களுக்கு உரிய வேலை கிடைக்காமல், பல குடும்பங்கள் வறுமையில் வாடி வருகின்றன. இதற்கு தொடர் வறட்சியே காரணம். சரியான மழை பொழிவின்மையும் இருந்து வருகிறது. எனவே வறட்சியில் வேலையின்றி சிரமத்துடன் பிழைப்பு நடத்தி வரும் ஏழைத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு மதிப்பெண் மற்றும் கல்விக் கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் காமராஜ் மற்றும் பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
சிதம்பரம்- சீர்காழி டவுன் பேருந்தை மீண்டும் இயக்க மக்கள் கோரிக்கை
சீர்காழி, மே 13-கொள்ளிடம் அருகே இரண்டு வருடங்களாக நிறுத்தப்பட்ட அரசு நகரப்பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.சிதம்பரத்திலிருந்து கொள்ளிடம், ஆச்சாள்புரம், ஆலாலசுந்தரம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சீர்காழிக்குஅரசு நகரப் பேருந்து சேவை கடந்த18.5.1993 அன்று துவக்கி வைக்கப் பட்டது. இந்த பேருந்து ஒரு நாளைக்கு 5 முறை இயக்கப்பட்டது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் பயனடைந்து வந்தனர். பின்னர் திடீரென இந்த சேவை நிறுத்தப்பட்டது.மீண்டும் பேருந்தை இயக்க வலியுறுத்தியதைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட பஸ்சுக்குப் பதிலாக சிதம்பரத்திலிருந்து வேறு தடங்கள் வழியாக பழையாறு துறைமுகத்துக்குச் செல்லும் டவுன் பஸ் திருப்பி விடப் பட்டது. அந்த டவுன் பேருந்தும் கடந்த 2 வருடங்களாக நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள், மிகுந்த அவதிக்குள்ளாகினர். இதனால் கொள்ளிடம், சிதம்பரம் மற்றும் சீர்காழி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளனர். வகுப்புகள் முடிந்து மீண்டும் கிராமங்களுக்கு உரிய நேரத்தில் வந்து சேர முடியாத நிலைஏற்பட்டுள்ளது.இதுகுறித்து ஆலாலசுந்தரம் விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கோவன் கூறுகையில், கடந்த 1993 ஆம்ஆண்டு சிதம்பரத்திலிருந்து கொள்ளிடம், ஆச்சாள்புரம், ஆலாலசுந்தரம் வழியாக சீர்காழிக்கு அரசு டவுன் பஸ்இயக்கப்பட்டது. பின்னர் அது திடீர்என நிறுத்தப்பட்டது. எனவே நிறுத்தப் பட்ட அரசு பேருந்தை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நலன் கருதி உடனடியாக மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பாஜக தலைவரின் வீடு அருகில் வெடிபொருள் வெடித்துச் சிதறி இரண்டு சிறுவர்கள் படுகாயம்
கோழிக்கோடு, மே 13-பாஜக தலைவரின் வீட்டின் அருகில் வெடிபொருள் வெடித்துச் சிதறியதில் பக்கத்து வீட்டு சிறுவர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.கேரள மாநிலம் கோழிக்கோடு அருகில் உள்ளது கொடுவள்ளி. இங்கு வசிப்பவர் சதாசிவன். பாஜக தலைவரான இவர்கொடுவள்ளி பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர். இவரது வீட்டின் முன்பகுதியில் திங்களன்று காலை வெடிபொருள் வெடித்துச் சிதறியுள்ளது. இந்த சிதறல்களால் அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் அதீப் ரஹ்மான் (10), ஜிதேவ் (8) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். கைகளும் முகமும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருவரும் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். கொடுவள்ளி காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர்.