பாலியல் வன்கொடுமைகள் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று சிபிஎம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி மாணவிகளுக்கு ஆதரவாகவும், குற்றவாளிக்கு எதிராகவும் வழக்கு பதிவதில் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் உறுதிகாட்டியிருக்க வேண்டும் என்று முன்னாள் திண்டுக்கல் தொகுதி சிபிஎம் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.
கே.பாலபாரதி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் மீதான தாளாளர் ஜோதிமுருகன் ஈடுபட்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக அரசு முன்வரவேண்டும் என்ற நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் மணிக்கூண்டு முன்பாக சிபிஎம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கே.பாலபாரதி கூறுகையில், போக்சோ குற்றவாளி ஜோதிமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய, உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்துவது தேவை என்று கருதுகிறோம். ஏனெனில் திமுக ஆட்சிக்கு வந்து 6 மாதம் கூட ஆகவில்லை. அதிமுக ஆட்சியில் இல்லாத அளவிற்கு திமுக ஆட்சியில் இத்தனை சிறுமிகள் பலாத்காரம் படுகொலை என்று சாதாரண மக்களை நம்ப வைப்பதற்கும் பேச வைப்பதற்குமான ஒரு அரசியல் நடைபெறுகிறது. இந்த அரசியலில் தமிழ்நாடு அரசு அழுத்தமாக கவனம் செலுத்தி இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டால்தான் யாரெல்லாம் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது தெரிய வரும்.
அதனை தொடர்ந்து சுரபி கல்லூரியின் மாணவிகள் 2 தினங்களாக போராடினர். முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் போராடுகிற மாணவியுடன் பேசியதில்லை. ஆனால் சுரபி நர்சிங் கல்லூரி மாணவிகள் போராடும் போது பாதிக்கப்பட்ட மாணவியிடம் அலைபேசியில் பேசுகிறார். உறுதியான நடவடிக்கை எடுப்போம். தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் சொல்கிறார். முதல்வர் ஸ்டாலின் பேசினார் என்பதை கூட கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் வழக்கில் உறுதித்தன்மை காட்டாமல் யார் நழுவ விட்டார்கள்? காவல்துறையினர் கடுமையான பிரிவுகளில் வழக்கு போட வேண்டியது தானே. அது பொய்யா? உண்மையா என்பதை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளட்டும். முதலமைச்சர் தலையிட்ட பிரச்சனையில் எவ்வளவு கவனமாக செயல்பட வேண்டும் என்று மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஏன் சிந்திக்கவில்லை என்பதை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
மேலும் ஜோதிமுருகன் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையில் ஜாமீனில் வெளிவருகிறார். அன்றைய தினம் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில மாநாடு திண்டுக்கல்லில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டிற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜீதா வருகிறார். இந்த வழக்கில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் எப்படி பெயில் கொடுத்தார்கள். அதுவும் போக்சோ குற்றவாளிக்கு எப்படி கொடுக்கப்பட்டது என்று எங்களிடம் கேள்வி எழுப்பினார். அவர் எங்களிடம் கேள்வி எழுப்பிய பிறகு தான் இது ஒரு சாதாரண பிரச்சனை இல்லை என்று அடுத்த நாள் நீதிமன்றம் முன்பாக போராடுகிறோம். நீதிமன்றம் என்பது மக்கள் நீதிமன்றம் தானே. பாதிக்கப்பட்ட மாணவிகள் குறித்து நீதிமன்றம் முன்பாக முறையிடுவதற்கு எந்த ஜனநாயக உரிமையும் கிடையாதா? என்று பாலபாரதி கேள்வி எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச்செயலாளார் ஆர்.சச்சிதானந்தம், மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.