தருமபுரி மாவட்டத்தில் 50 அடி ஆழ கிணற்றில் குட்டி யானை ஒன்று விழுந்த நிலையில் அதை மீட்க கடந்த 10 மணிநேரத்திற்கு மேலாக வனத்துறையினர் போராடி வருகிறார்கள்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சபள்ளி சின்னாறு அணையை அடுத்த ஏலகுண்டூர் என்ற இடத்தில் தண்ணீர் குறைவாக உள்ள நிலையில் கிணறு உள்ளது. இந்த வழியாக உணவு தேடி வந்த பெண் யானை கிணற்றில் விழுந்தது. யானையின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்த வனத்துறையினர் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் கயிறு கட்டி கிரேனை பயன்படுத்தி இழுக்க முயற்சி நடந்தது. ஆனால், முடியவில்லை. இதனால், கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியே எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், கிணற்றுக்குள் மோட்டாரை இறக்கினால் யானை தெரியாமல் யானை தொட்டாலும் மின்சாரம் பாயும் ஆபத்தும் உள்ளது என்பதால், முதலில் யானைக்கு மயக்க ஊசி போடப்பட்டுள்ளது. 10 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வருகிறார்கள்.
யானைகள் உணவைத் தேடி ஊருக்குள் வரும் போது கிணற்றில் தவறி விழுவது, மின்சாரம் பாய்ந்து இறப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.