தமிழக சட்டப்பேரவைத்தலைவர் தொடர்ந்து சட்ட வரம்புகளை மீறி செயல்பட்டு வருகிறார். ஏற்கெனவே 18 எம்எல்ஏ-க்களை பதவி நீக்கம் செய்தது, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யத் தவறியது போன்ற பிரச்சனைகளில் சட்டவிதிகளுக்கு முரணாக மைனாரிட்டி எடப்பாடி அரசை பாதுகாக்கும் நோக்கோடு அவர் செயல்பட்டது அனைவரும் அறிந்ததே. கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்ட பின்னரும், தனது போக்கை மாற்றிக் கொள்ளாமல் தற்போது 3 எம்எல்ஏ-க்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபைக்குள் கொறாடாவின் உத்தரவிற்கு மாறாக செயல்பட்டால் மட்டுமே அவர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் பேரவைத்தலைவருக்கு உண்டு. சட்டமன்றத்திற்கு வெளியில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கட்சிக்கட்டுப்பாட்டை மீறினால் அவரை சம்பந்தப்பட்ட கட்சியிலிருந்து நடவடிக்கை மேற்கொள்ள முடியுமே தவிர, சட்டமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க முடியாது. மேலும், சட்டமன்றத்திற்கு வெளியே சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை பேரவைத்தலைவர் கேள்வி எழுப்புவதற்கும் சட்டவிதிகளில் இடமில்லை.
இத்தகைய தெளிவான வழிகாட்டுதல்களை மீறி 3 எம்எல்ஏ-க்களுக்கு பேரவைத்தலைவர் நோட்டீஸ் அளித்தது சட்ட விரோதமானதாகும். இது குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம் அதற்கான இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது, மேலும் பேரவைத்தலைவர் விளக்கமளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. சட்டவிதிகளை மீறி எடப்பாடி அரசை காப்பாற்றும் குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயல்பட்ட பேரவைத்தலைவர் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கதாகும். பேரவைத்தலைவரின் செயல்பாடு சட்டமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைப்பதாக உள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுவதோடு, சட்டப் பேரவையின் ஜனநாயக மாண்புகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்துகிறது.
சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து...