tamilnadu

img

போராடினால் வெற்றி உறுதி! - கே.பி.பெருமாள்

கடந்த 2018ம் ஆண்டில் தமிழகத்தில் மக்காச்சோள விவசாயிகளுக்கு பெருந் துயரம் ஏற்பட்டது. 

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் விவசாயம் செய்ய ஏற்ற பயிராக மக்காச்சோளம் இருப்பதால் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், பெரம்பலூர், கடலூர், சேலம், திருப்பூர், திண்டுக்கல், கோவை, விழுப்புரம், தேனி, அரியலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. 2018 ஆகஸ்ட் மாதம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட  பகுதிகளிலும் அக்டோபர் மாதத்தில் வேப்பூர், தொழுதூர், திட்டக்குடி, விளாத்திகுளம், கோவில் பட்டி, ரெட்டியார் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்காச்சோள பயிரில் பால் ஆர்மிவார்ம் (அமெரிக்க படைப்புழு) என்ற பூச்சி தாக்குதலால் லட்சக்கணக்கான ஏக்கர் மக்காச்சோளம் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மிகப்பெரும் சோகத்திற்கு தள்ளப்பட்டனர். 

போராட்டம்

மக்காச்சோளப் பயிர் பூச்சி தாக்குதலுக்கு உட்பட்ட திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் பகுதியில் காமாட்சிபுரம், ஸ்ரீராமபுரம் கிராமங்க ளுக்கு சென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட தலைவர்கள், விவசாயி கள் 2018 நவம்பர் 23 அன்று நேரில் சென்று ஆய்வு செய்து அதன் பின் அரசுக்கும் பத்திரி கைகளுக்கும் செய்திகள் வெளியிடப்பட்டது. 30.8.18ல் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகளை திரட்டி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கிட வேண்டும். மோசமான விதைகளை விற்பனை செய்வதற்கு பரிந்துரைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மோசமான விதைகளை உற்பத்தி செய்த கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று ஆட்சியரிடம் மனுக் கொடுக்கும் போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 7.12.18 அன்று நடத்துவது என்று அறிவித்து பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகளை திரட்டினர். குறிப்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்றனர். அதன் பின் 10.12.18 அன்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 ஆயிரம் விவசாயிகள் ஆக 10 ஆயிரம் மக்காச்சோள விவசாயிகள் அங்கு மட்டும் கலந்து கொண்டனர். மொத்தத்தில் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று ஆட்சித்தலைவர்களிடம் மனு கொடுத்தனர். 

12.12.18 அன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், கடலூர் மாவட்டம் வேப்பூர், தொழுதூர் உட்பட கிராம அளவில் பல இடங்க ளில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது. விவசாயிகளின் எழுச்சியை பார்த்து தமிழக சட்டமன்றத்தில் 2019 ஜனவரி 5ம் தேதி குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமசந்திரன் மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்று குரல் எழுப்பினார். தமிழக முதல்வர் இறவை பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.13500ம், மானாவாரி பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.7410ம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த இழப்பீடு போதாது என்றும், கூடுதலாக ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்று 22.1.19 அன்று பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தால் நடத்தப்பட்டது. ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை. அறிவித்த இழப்பீடும் தமிழக அரசு வழங்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல் வந்தது. மக்காச்சோள பயிருக்கான இழப்பீடு அறிவிப்பு “கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது”. தேர்தல் முடிந்த பின்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் வருவாய்துறை அமைச்சரை 10.6.19 அன்று சந்தித்து மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு அறிவித்தீர்கள். ஆனால் வழங்கப்படவில்லையே என்று மனு கொடுத்து சந்தித்து பேசினார்கள். உடனடியாக அமைச்சர் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களை அழைத்து தலைவர்களையும் வைத்து பேசிய பின் முதல்வர்  கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்கிறேன் என்று தெரிவித்தார். 

தமிழக அரசு ஆணை
 

தமிழ்நாடு முதல்வர்  சட்டமன்றத்தில் 4.7.19 அன்று 110 விதியின் கீழ் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 17 மாவட்டங்களில் உள்ள 2,20,986 ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்த 2,93,424 விவசாயிகளின் மக்காச்சோள பயிருக்கு 186 கோடியே 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும். பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு கிடைக்கவும் வேளாண்மை துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். அதன் பின் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக 40,373 விவசாயிகளுக்கு ரூ.33 கோடியே 8 லட்சத்து 50 ஆயிரத்து 33 வழங்கப்படுகிறது. அடுத்ததாக, பெரம்பலூர் மாவட்டத்தில் 77,825 விவசாயிகளுக்கு ரூ.32 கோடியே 18 லட்சத்து 45 ஆயிரத்து 940-ம், சேலத்தில் 47,441 விவசாயிகளுக்கு ரூ.27 கோடியே 38 லட்சத்து 15 ஆயிரத்து 145-ம், விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு 22 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல் வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், கோவை, திருப்பூர், கடலூர், அரியலூர், திருச்சி, இராமநாத புரம், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தேனி ஆகிய 17 மாவட்ட விவசாயிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், தமிழகத்தில் டிகால்ப், பயனீர், என்.கே.33, ராசி போன்ற பெயர்கொண்ட மக்காச்சோள விதைகளை பன்னாட்டு கம்பெனியான மான்சான்டோ உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறது. பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகும் மக்காச்சோள விதைகளை உற்பத்தி செய்த மான்சான்டோ உள்ளிட்ட கம்பெனிகள் மீதும், இந்த விதையை விற்பனை செய்ய சிபாரிசு செய்த வேளாண்மை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்காச்சோளத்திற்கு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்காப்பீடு கிடைக்க தமிழகஅரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 2018 ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து ஓராண்டு காலமாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை திரட்டி போராட்டம் மற்றும் மனு கொடுத்தல் மூலம் அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோரை தொடர்ந்து சந்தித்து இழப்பீடு கோரிக்கையை வலியுறுத்தப்பட்டது. இதன் விளைவாக தமிழகத்தில் முதன்முறையாக, பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பிரச்சனைக்கும் தொடர்ந்து விடாப்பிடியாக போராட்டம் நடத்தினால் நமது கோரிக்கை கண்டிப்பாக நிறைவேறும் என்பதையே இத்தொடர்போராட்டம் புலப்படுத்துகிறது. எதிர்காலத்தில் விவசாயிகள் பாதிக்கப்படும் போது ஒன்றிணைந்து போராடுவோம். நமது கோரிக்கைகளை வென்றெடுப்போம். 

கட்டுரையாளர் : மாநில பொருளாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்