tamilnadu

img

ரயில் பயணம் கனவாகிப் போகுமோ?

கொரானாவின் தாக்கத்தால் மக்கள் இன்னும் முழுமையான இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் அல்லல்பட்டு நோயோடு எதிர்நீச்சல் போட்டு கொண்டிருக்கும் வேளையில் நாடு முழுவதும் நின்று போன ரயிலை இயக்க முடியவில்லை. சிறப்பு ரயில்களை விட்டு சோதனை பார்க்கும் நிலையில், சென்னை போன்ற பல இடங்களில் புறநகர் ரயிலையும் இயக்கிட முடியவில்லை. அதேபோல கேரளாவிற்கு ஒரு ரயில் கூட விடுவதற்கு எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது அவசர அவசரமாக தனியார்  ரயிலை திருப்பதிக்கும், எர்ணாகுளம் கொச்சுவளிக்கும் திறந்து விடுவதற்கு என்ன தேவை ஏற்பட்டது? தனியார்மய மோகம் மோடி அரசின் கண்களை மறைக்கிறது. தனியார் ரயில் விடுவதன் மூலம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது போல நாடகமாடி ஒரு பெருங்கொள்ளையை மக்களிடம் நடத்திட மோடி அரசு வழி செய்கிறது. 

பாஜக மோடி அரசின் தனியார்மயத்தால் சீரழிந்து கொண்டிருக்கும் ரயில்வேயில் 150ரயில்களை 109 வழித்தடங்களில் 2023ல் தனியார் ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்த மோடி அரசால், அதுவரை கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் கார்ப்பரேட்டுகளின் ‘அவசர’ தேவையாலும், மத்திய அரசு கஜானாவின் காலி பசியாலும் தனியார் ரயில்களை இரண்டு தடங்களில் இயக்கிட கடந்தசெப்டம்பர் 15 அன்று நிர்வாகம் உத்தரவிட் டது. அரசின் தண்டவாள பாதை, மின் பாதை,ஸ்டேஷன்கள், கட்டமைப்புகள், இஞ்சின்கள்ரெடிமேடாக இருப்பதினால் நோகாமல்நுங்கு தின்பதைப் போல கார்ப்பரேட்டுகளுக்கு எந்த நோயும் வலியுமில்லாமல் அப் படியே லாபத்தை வாரிக் கொண்டு போக ரயில்களை இயக்கத் துவங்கி விட்டார்கள். பாதைகளையும், கட்டமைப்புகளையும் தனியார் உருவாக்கி தான் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோட்பாடுகள் இல்லாத காரணத்தால் தனியார் தனது விருப்பம் போல் ரயில்களை ஓட்ட தயாராகி விட்டார்கள். திருப்பதியில் பிள்ளையார் சுழி போட்டமுதல் ரயில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு வாரம் இரண்டு நாட்கள் சனி, ஞாயிறுகளிலும், எர்ணாகுளம் கொச்சுவளிக்கு வாரம்3 தினங்களும் இயக்கிட கால அட்டவணையும் போட்டு ஜரூராக நடக்கிறது.

பாஜக அரசின் தனியார்மய மிருக வெறிமதம் பிடித்த யானை போல ஓடத் துவங்கி விட்டது. பாஜகவின் இரண்டாவது ஆட்சி நிறைவடைவதற்குள் மிகப்பெரிய பொதுத் துறையான ரயில்வே முழுவதுமாக நொறுக்கப்பட்டு கார்ப்பரேட்டுகளின் கைகளில் தாரைவார்க்கப்பட தனியார்மய திட்டங்கள் வேகமாக அரங்கேறுகின்றன.ரயில்வேயில் தனியார்மய வேலைகள்முன்பெல்லாம் உள் நாட்டு முதலாளிகளோடுமுடியும். இப்போது டெண்டர்களை புறந்தள்ளி விட்டு வெளி நாட்டு முதலாளிகளையும், உள் நாட்டு முதலாளிகளையும் நேரடியாக வரவழைத்து பகிரங்கமாக ஏலம் விடும்வேலைகளை மோடி அரசு துவக்கி இருக்கிறது. ஏலம் 12 குழுமங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. ஏலத்தில் சிஏஎப், ஜிஎம் ராவ் குரூப், கல்டர்லைட், வேதாந்தா, பாரத்போர்ஜ், பம்பாடியார் போன்ற 16 நிறுவனங்கள் பங்கேற்கவிருப்பம் தெரிவித்துள்ளன.

தனியார்மய திட்டங்கள்
224 ரயில்களை 109 வழித்தடங்களில் தனியாருக்கு ஏலம் விட கடந்த ஜூலை 1ந் தேதிஅறிவிப்பு வெளியிடப்பட்டது. தென்னக ரயில்வேயில் 139 தடங்களில் 26 ரயில்களை ரூ.3221 கோடிக்கு கொடுத்திட முடிவு. நாடு முழுவதும் 150 ரயில்களை ரூ.30 ஆயிரம் கோடிக்கு 35 வருட காலம் குத்தகைக்கு விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. 500 பாசஞ்சர் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றம் செய்யப்படும். ரயில்வேயில் மொத் தம் 2800 விரைவு ரயில்களில் 2025 க்குள்500 ரயில்களை தனியாரிடம் கொடுத்திட திட்டம் உண்டு. லாபம் தரும் இடங்களையும்,கூட்ஸ் வண்டிகளையும் தனியாருக்கு கொடுப்பதும் இதில் அடங்கும். 

தனியாருக்கு தாராள சலுகைகள்
ஒரு சிறு தொகையை கொடுத்து விட்டு அரசு வைத்திருக்கும் மிஷனரிகளை, கட்டமைப்புகளை தனியார் பயன்படுத்தி மிகப் பெரிய லாபத்தை எடுத்துச் செல்ல அரசே தனியாருக்கு சில தாராள சலுகைகளை அளித்துஉள்ளது. கட்டணங்களை தனியாரே நிர்ணயம் செய்து கொள்ளலாம். முதியோர், மாற்றுத் திறனாளி சீசன் டிக்கெட்டிற்கு இருக்கக் கூடியபல கட்டண சலுகைகளை நீக்கி கொள்ளலாம். ரயில்வே ஊழியர்களின் பாஸை தடைசெய்து கொள்ளலாம். லோயர்பர்த், ஜன்னல்ஓர இருக்கைகளுக்கு சிறப்பு கட்டணம் நிர்ணயம் செய்யலாம். பதிவில்லா பெட்டிகளை இணைக்க வேண்டாம். டிரைவர் கார்டுகளை பயன்படுத்தி கொள்ளலாம். இஞ்சின்களை பெட்டிகளை தனியார் சொந்தமாக தயாரித்து இயக்கும்வரை பொதுத்துறை ரயில்வேக்குரியவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். பராமரிப்பு பணிகள் உட்பட இஞ்சினியரிங் சிக்னல், ஓஎச் ஆப்ரேடிவ் வேலைகள் ரயில்வேஊழியர்களால் கவனிக்கப்படும். தனியார்ரயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்குமுன்பும் பின்பும் அரசு ரயில் இயக்கப்படாது. தனியார் ரயில் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு சென்றடைய அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும். தனியார் ரயில்கள் இயக்கப்படுவதற்குள் பல சிக்கன சீர்திருத்தங்களை நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே காலியாக இருந்த 3 லட்சம் காலியிடங்கள் ஸ்வாகா செய்யப்படும். மத்திய அரசில் புதிய நியமனங்களுக்கு தடை. 50% சதமான இடங்கள்சரண்டர் செய்யப்படும். இதன் மூலம் தென்னக ரயில்வேயில் 3000 பேரும், மொத்தமாகரயில்வேயில் ஒரு லட்சம் பேரும் வேலை இழப்பார்கள். ஆர்ஆர்பி, ஆர்ஆர்சி தேர்வுகள் நடத்தப்படாது. ஐசிஎப் போன்ற 44 மிகப்பெரிய தொழிற் சாலைகள் கார்ப்பரேஷனாக்கபட்டு பின்னர் தனியாரிடம் ஒப்படைக் கப்படும்.

கட்டாய ஓய்வுத் திட்டம்
கடந்த ஐந்து மாத கொரோனா காலங்களில் ரயில்கள் முழுவதுமாக நின்று போனதால் ரயில்வே மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து வருகிறது. ஊழியர்களுக்கு வழங்கிவந்த பஞ்சப்படி 18 மாதங்கள் நிறுத்தப்பட்டது. அரியர்ஸூம் மறுக்கப்பட்டது. ஊழியர் களுக்கு மாத ஊதியம் வழங்க முடியாமல் நிதி அமைச்சகத்திடம் நிதி கேட்டுரயில்வே மடிப் பிச்சை கேட்ட நிகழ்வையும் நாம் கண்டோம். இப்போது 50 % சதம்பயணப்படியை, ஓவர்டைம் அலவன்ஸை நிர்வாகம் வெட்டியுள்ளது. பிஎஸ்என்எல்லில் கட்டாய ஓய்வுத் திட்டத்தில் 90 ஆயிரம் பேரை வெளியேற்றியது போல ரயில்வேயிலும் கட்டாய ஓய்வுத் திட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்கள்.

55 வயது / 30 வருட சர்வீஸ், அதோடு நன்னடத்தை விதிகளை சுட்டிக் காட்டி ஊழியர்களை வெளியேற்றும் வேலை துவக்கப் பட்டுள்ளது. ரயில்வேயில் 1.40 லட்சம் காலியிடங்களை நிரப்பிட ஆன்லைன் தேர்வை டிசம்பரில் நடத்தப்போவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக 8.20 கோடி விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. ரயில்வே, வங்கி போன்ற மத்திய அரசு சி,டி, பணியிடங்களை நிரப்பிட இனி தனித் தேர்வு கிடையாது. அகில இந்திய தகுதித் தேர்வு ‘என்ஆர்ஏ’ (நீட்) நடத்தப்படும். 2019-20 காலக்கட்டத்தில் ரயில்வே வருமானம் ரூ.1,76,660 கோடி வந்துள்ளது. அதனால் போனஸ் கூடுதலாக தர வேண்டும்என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 9 வருடங்களாக 78 நாட்கள் மட்டுமே போனஸாக தந்தது மாற்றப்பட்டு, இவ்வருடம் கூடுதலாக போனஸ் தர வேண்டும் என்று ஊழியர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

கட்டாய ஓய்வுத் திட்டத்தை எதிர்த்தும், தனியார்மயத்தை எதிர்த்தும் டிஆர்இயு கடந்த செப்டம்பர் 15 முதல் 22 -விழிப்புணர்வு பிரச்சாரமும், செப்டம்பர் 22 அனைத்து டிவிசன்களில் ஆர்ப்பாட்டத்தினையும் நடத்தியது. தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது. ரயில்வே சங்கங்கள் தவிர பொது மக்களும் தனியார் ரயில்களை ஓட்டிட அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டக் களத்தில் இறங்க வேண்டும். அப்போது தான் தனியார்மயம் தடுத்து நிறுத்தப்படும். ரயில்வேதனியார்மயத்தைத் தடுத்து நிறுத்த, ரயில்வே தொழிலாளர்களின் மகத்தான தலைவர் தோழர் அந்த நம்பியார் அவர்களது நினைவுதினத்தில் (அக்டோபர்) உறுதியேற்போம்!

====எஸ்.சாம்பசிவன்====