tamilnadu

தஞ்சாவூர், கடலூர் , சேலம் முக்கிய செய்திகள்

மாற்று நெகிழிப் பை கண்டுபிடித்த மாணவிக்கு தமுஎகச பாராட்டு
தஞ்சாவூர் நவ.24- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் வழியில் பயிலும் மாணவி அர்ச்சனா. கரூரில் சமீபத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில்அர்ச்சனா காட்சிப்படுத்திய “மாற்று நெகிழிப்பை” மாநில அளவில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. அவரது கண்டுபிடிப்பு அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. பிளாஸ்டிக் பைகளால் பூமியின் எதிர் காலமே கேள்விக் குள்ளாக்கப்பட்டிருக்கிறது. பிளாஸ்டிக் கேரி பைகளை தவிர்க்க வேண்டி அரசும், பொது அமைப்புகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்ய வேண்டி இருக்கிறது. இறந்து போன மாட்டின் வயிற்றில் பிளாஸ்டிக்பைகள் நிறைந்திருந்தையும், அதனால் மாடுஉயிரிழந்ததையும் கண்டு வேதனை அடைந்த அர்ச்சனா அன்று முதல் மக்காத கேரிபேக்குகளுக்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டும் தீவிரமாக முயற்சி செய்து வந்திருக்கிறார்.  இதையடுத்து அறிவியல் கண்காட்சி நடப்பதை பயன்படுத்திக்கொண்ட அர்ச்சனா ஆசிரியர் ஜென்சிரூபா உதவியுடன் மக்காச்சோள மாவில் வினிகரை கலந்து சூடுபடுத்தவே பயோநெகிழிக்கான மூலம் கிடைத்து உள்ளது. இதில்தேர்வு செய்யப்பட்டவர், அகில இந்திய அளவில் நடைபெறும் கண்காட்சியிலும் பங்கேற்க இருக்கிறார். அரசுப்பள்ளியில் படித்து சாதனை படைத்திருக்கிற அர்ச்சனாவை பாராட்டும் வகையில்,பட்டுக்கோட்டை தமுஎகச கிளை சார்பில் மாணவிக்கு சால்வை அணிவித்து, மகாகவி பாரதிகவிதைகள் புத்தகம் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. 

சவுடுமண் குவாரியில் விதிமீறல் புகார் கூறும் பொதுமக்கள்
சிதம்பரம்,நவ.24 கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரசு அனுமதி பெற்று இயங்கும் சவுடு மண் குவாரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக ஆழம் தோண்டி மணல் அள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சிதம்பரத்தை அடுத்த சிலம்பிமங்கலம் கிராமத்தில் அரசின் அனுமதி பெற்று ராமலிங்கம் என்பவர் சவுடு மண் குவாரி நடத்தி வருகிறார். 2 ஹெக்டேர் பரப்பில் நடத்தி வரும் குவாரியில் அரசு நிர்ணயித்த அளவைத் தாண்டி 30 அடி ஆழம் வரை தோண்டி மணலை அவர் அள்ளி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அத்துடன் அனுமதி பெற்ற இடத்தைத் தாண்டி பக்கத்து நிலங்களிலும் 20 அடி ஆழம் வரை மணல் அள்ளப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. 4 பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் அள்ளிச் செல்லப்படுவதாகவும் அதுகுறித்து கேள்வி எழுப்பினால் தங்களை அங்கு பணிபுரிபவர்கள் மிரட்டுவதாகவும் கிராமத்தினர் கூறுகின்றனர்.   தொடர்ந்து அப்பகுதியில் மணல் வளம் சுரண்டப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் என்று கூறும் கிராமத்தினர், சுனாமி பாதித்த பகுதி என்பதால் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பும் ஏற்படக்கூடும் என அஞ்சுகின்றனர். கோட்டாட்சியர், சார் ஆட்சியர் தொடங்கி கனிமவளத்துறை வரை பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறும் பொதுமக்கள், அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த லாரிகளையும் பொக்லைன் இயந்திரங்களையும் சிறைபிடித்தனர். பொதுமக்களின் இந்தப் புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வனிடம் கேட்டபோது, அப்பகுதியை ஆய்வு செய்து விதிமீறல் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகக் கூறினார். 

விபத்தில் வங்கி ஊழியர் பலி
சின்னசேலம்,நவ.24- சேலத்தில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்யும் இளவரசன் (28), கார்த்திக் (18), தினேஷ் (26), யுவராஜ் (28), சுரேஷ் (28).  இவர்கள் 5 பேரும் விடுமுறை யையொட்டி 5 ஒரு காரில் புதுவை மாநிலத்துக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அதே காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். பின்னர் சின்னசேலம் அருகே வந்த போது முன்னாள் சென்ற டேங்கர் லாரி மீது கார் மோதியது. இதில் 5 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை மருத்துவ மனைக்கு அழைத்து செல்லும் வழியில் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.