tamilnadu

img

தஞ்சை தேர் தீ விபத்தில்11 பேர் பலி

தஞ்சை அருகே தேரில் மின்சாரம் பாய்ந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94 ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது இத்திருவிழாவில் நேற்று நள்ளிரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது. தேரில் அப்பர் படம் வைத்து களிமேடு கிராமத்திலுள்ள 4 வீதிகளிலும் தேர் வலம் வந்தது. புதன்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியது.
இதனால் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இவர்களில் களிமேடு கிராமத்தைச் சேர்ந்த எம். மோகன் (22), முன்னாள் ராணுவ வீரர் கே. பிரதாப் (36), ஏ. அன்பழகன் (60), இவரது மகன் ராகவன் (24), நாகராஜ் (60), ஆர். சந்தோஷ் (15), டி. செல்வம் (56), எம். ராஜ்குமார் (14), ஆர். சாமிநாதன் (56), ஏ. கோவிந்தராஜ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் பலத்த காயமடைந்த எம். ரவிச்சந்திரன் (48), ஆர். கலியமூர்த்தி (40), கே. ஹரிஷ் ராம்  (10), எம். நித்தீஷ் ராம் (13), ஏ. மாதவன் (22), டி. மோகன் (54), என். விஜய் (23), எம். அரசு (19), ஜி. விக்கி (21), திருஞானம் (36), வி. ஹரிஷ் (11), மதன் மனைவி சுகுந்தா (33), பி. கௌசிக் (13), எஸ். பரணி (13) ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பரணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார் மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து களிமேடு கிராமத்திற்கு சென்ற இடத்தை பார்வையிட்டார். இதேபோல தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஏ. கயல்விழி,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடி தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். 
இந்நிலையில் தேர் தீ விபத்து குறித்து விசாரிக்க குமார் ஜெயந்த் ஐஏஎஸ் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 
இந்நிலையில் தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் காயம் அடைந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.