tamilnadu

img

தென்மாவட்ட ரயில்களின் பெயர்களை மாற்றி இயக்க உத்தரவிட்டது யார்? ரயில்வே நிர்வாகத்திற்கு வைகோ கேள்வி

சென்னை:
கோவில்பட்டியில் ரயில்களை தொடர்ந்து நிறுத்தவேண்டும் என்றும் பெயர்களை மாற்றக்கூடாது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர்விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கொரோனா ஊரடங்குக்குப் பின்னர், ரயில்வே துறையினர், பாதிக்கும் குறைந்த அளவிலேயே ரயில்களை இயக்கி வருகின்றனர். அப்படி ஓடுகின்ற ரயில்கள் முன்பு வழக்கமாக நிற்கின்ற பெரிய ரயில் நிலையங்களில் கூட இப்போது நிற்காமல் ஓடுகின்றன. இதனால், தமிழகம் முழுமையும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரம் மட்டும் அல்ல, நூற்றுக்கணக்கான தீப்பெட்டி ஆலைகள், கடலை மிட்டாய், பட்டாசு, விவசாயம், நூற்பு ஆலைத் தொழில்கள் நிறைந்த பகுதி கோவில்பட்டி ஆகும். தென் மாவட்டங்களில் ஒரு பெரிய இணைப்பு மையமாக கோவில் பட்டி  திகழ்கின்றது.எனவே, கோவில்பட்டி வழியாக நாள்தோறும் 27 பயணிகள் ரயில்கள் இரு வழிகளிலும் ஓடிக் கொண்டு இருந்தன. முன்பதிவின் மூலமாக, நாள் தோறும் ரூபாய் 4 லட்சம் என ஆண்டுக்கு ரூபாய் பத்துக் கோடி, மதுரைக் கோட்டத்திற்கு வருவாய் பெற்றுத் தருவதால், கோவில்பட்டி நிலையம், ‘ஏ’ கிரேடு தகுதி பெற்று இருக்கின்றது.

ஆனால், இப்போது பாதி ரயில்கள் தான் ஓடுகின்றன. அதிலும், நாகர்கோவில்-சென்னை விரைவு ரயில், மதுரையில் இருந்து நாள்தோறும் இரவு 11 மணிக்குப் புறப்படும் புனலூர் விரைவு ரயில், நாகர்கோவில் -கோவை விரைவு ரயில், சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் அதிவிரைவு ரயில் ஆகியவை, கோவில்பட்டி நிலையத்தில் நிற்காமல் செல்கின்றன.மேலும், வாரந்தோறும் புதன், வெள்ளி ஆகிய நாள்களில் மட்டுமே ஓடுகின்ற, கன்னியாகுமரி- தில்லி நிஜாமுதீன் விரைவுரயில்,, வெள்ளிக்கிழமை மட்டும் ஓடுகின்ற நாகர் கோவில்-சென்னை ரயில் ஆகிய ரயில்களும் கோவில்பட்டி நிலையத்தில் நிற்பது இல்லை.இதனால், ஏழை,எளிய, நடுத்தரப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.   எனவே, மேற்கண்ட ரயில்கள் அனைத்தும், முன்பு போலவே கோவில்பட்டி நிலையத்தில் நின்று செல்ல, தெற்கு ரயில்வே உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லட்சக்கணக்கான மக்கள், அன்றாடம் பாசஞ் சர் ரயில்களைத்தான், தங்களுடைய தொழில், வேலைவாய்ப்புக்கு நம்பி இருக்கின்றனர். எனவே, பாசஞ்சர் ரயில்களையும் இயக்க வேண்டும். பொதிகை, நெல்லை, கன்னியாகுமரி என்ற பழந்தமிழ்ப் பெயர்களில் ஓடிக் கொண்டு இருந்த அத்தனை ரயில்களின் பெயர் களையும் மறைத்து, சிறப்பு ரயில்கள் என ஒரே பெயரில் இயக்குவதை கைவிடவேண்டும்.இந்த ரயில்களின் பெயர்களை மாற்ற உத்தரவிட்டது யார்? அதற்கு நிர்பந்தம் எங்கிருந்து வந்தது.இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ வினவியுள்ளார்.

;