சுவர் இடிந்து 2 தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி, ஜூலை 16- கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே உள்ளது எம்.சி.பள்ளி கிராமம். இங்கு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் 70 ஆண்டுகள் பழமையான பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்காக பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியில் 11 தொழிலாளர்கள் ஈடுபட்டி ருந்தனர். அப்போது கட்டிடத்தின் 12 அடி உயர மண் சுவர் இடிந்து விழுந்ததில் அண்ணாமலை (60), ரவி (56) இருவரும் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி, உடற்கூறாய்வுக் காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்க துரை விசாரணை மேற்கொண்டார்.
காலமானார்
சிதம்பரம், ஜூலை 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக் குழு உறுப்பினரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளருமான வாஞ்சிநாதனின் மாமனார் க.ராஜாராம் (65) உடல்நலக்குறைவால் புதுச்சேரி மருத்துவமனையில் காலமானார்.
அவரது உடல் புவனகிரி அருகில் உள்ள உடையூர் கிராமத்தில் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சின்னத்தம்பி மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.
டிராக்டர் மோதி பெண் பலி
திருவண்ணாமலை, ஜூலை 16- திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த களியம் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவின்போது அஜித்குமார் என்பவர் ஓடி வந்த டிராக்டர் கிராம மக்கள் மீது மோதியது. இதில் பிரகாஷ் மனைவி செம்பருத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உமா, ராஜ பிரியா, சாந்தி, கலைவாணி ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்தனர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச் செயலாளர் ப.செல்வன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், எஸ். ராமதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு விசாரணை
திருவண்ணாமலை, ஜூலை 16- கலசபாக்கம் வட்டத்தில் உள்ள வீரளூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள் சுய உதவி குழுக்களில் பங்குத்தொகை முறைகேடு, காப்பீடு பெயரில் முறைகேடுகள் உள்ளிட்டவை குறித்து பல்வேறு புகார்கள் எழுந்தது. இதையடுத்து, கூட்டுறவு சங்க செயலாளர் மீது, போளூர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நேரடி விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3 ஆம் நாள் நடைபெற்ற விசாரணையில், பாதிப்புக்கு உள்ளான ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களது புகார் தெரிவித்தனர்.