இடைத் தரகர்களின் பிடியில் வேளாண் துறை
விழுப்புரம். செப். 15- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதி வேளாண்மை துறையில் அரசு விவசாயிகளுக்கு வழங்கும் சொட்டு நீர், இயந்திர கருவிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு மானியங்களில் முறைகேடு மற்றும் ஊழல் திட்டங்களை பெறுவதில் புரோக்கர்கள் ஆதிக்கம் செலுத்துவதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செஞ்சி வேளாண்மை துறை அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் கே.மாதவன் தலைமை தாங்கினார், சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன், தலைவர் பி.சிவராமன், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.ஆர்.குண்டுரெட்டியார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.வட்டச் செயலாளர் வி.சிவன், எம்.ஏழுமலை, சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். வேளாண்மை துறையில் விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானிய திட்டங்களில் நடக்கும் முறைகேடு, சொட்டு நீர், தெளிப்பு நீர் திட்டத்தை பெற விவசாயிகளிடம் ரூ.3500 வரை லஞ்சம் கேட்கும் போக்கு, விவசாய இயந்திரங்கள் பெற ரூ.50 ஆயிரம் வரை லஞ்சம், அரசு திட்டங்களை பெற புரோக்கர்கள் ஆதிக்கம் ஆகியவற்றை கண்டித்து பேசினர். மாவட்டத்தில் வெள்ளைப் பொன்னி விதைநெல் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்பாட்டத்தில் வலியுறுத்தி பேசினர்.
வி.ஞானபானு காலமானார்
புதுச்சேரி,செப்,15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பாகூர் நெட்டப்பாக்கம்கொம்யூன் குழுவிற்கு உட்பட்ட கரிக்கலாம்பாக்கம் கிளை ஸ்தாபகர் வி.ஞானபானு (70) ஞாயிறன்று (செப். 15)உடல் நலக்குறைவால் கால மானார். அவரது உடலுக்கு புதுச்சேரி பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன், செயற்குழு, பிரதேசக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். திங்களன்று (செப். 16) காலை 11 மணிக்கு புதுச்சேரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அவரது உடல் தானம் செய்யப்பட உள்ளது. மறைந்த ஞானபானு விற்கு சித்ரா என்ற மனைவியும், நிருபன் என்ற மகனும், கோமதி, வைகை ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.