உழைக்கும் வர்க்கத்தை பாதுகாக்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஒசூரிலிருந்து துவங்கிய நடைபயண பிரச்சாரக்குழு தருமபுரி வந்தடைந்தது. இரண்டாம் நாளான செவ்வாயன்று பாலக்கோட்டிலிருந்து திருமால்வாடி கிராமத்தை வந்தடைந்தது. அங்கு சிஐடியு மாநில துணைத்தலைவர் கே.ஆறுமுக நயினார் தலைமையிலான பயணக்குழுவிற்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராஜன், சாலை போக்குவரத்து சம்மேளன துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கோவையிலிருந்து துவங்கிய நடைபயணக்குழு திங்களன்று இரவு திருப்பூர் மாவட்டம், அவிநாசியை வந்தடைந்தது. செவ்வாயன்று திருமுருகன்பூண்டியிலிருந்து நடைபயணப் பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் தொடங்கி வைத்தார். இதன்பின் திருப்பூர் மாநகருக்கு வந்த சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபிக்குமார் தலைமையிலான பயணக்குழுவிற்கு பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதில் சிஐடியு மாநில துணைத்தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கட்டுமானத் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் டி.குமார், விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத் தலைவர் பி.முத்துசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.