செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணைய தளம் மூலம் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதிவரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
1927 முதல் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரை இந்தியாவில் நடத்துவது இதுவே முதன்முறையாகும். இந்நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடர்பான அறிவிப்பை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
ஆன்லைனில் tickets.aicf.in என்ற இணையதளத்திலிருந்து டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். டிக்கெட் கட்டணம் ரூ.200 ரூபாயிலிருந்து 8000 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதில், மாணவர்கள், 19 வயதுக்குட்பட்டவர்கள், பெண்கள், தமிழக அரசு ஊழியர்களுக்கு டிக்கெட் கட்டணம் 2 மணி நேரத்திற்கு 200 மற்றும் 300 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், ஒருநாள் முழுவதும் போட்டியை பார்க்கும் இந்தியர்களுக்கு டிக்கெட் கட்டணம் ரூ.2000 மற்றும் ரூ.3000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒருநாள் முழுவதும் போட்டியை பார்க்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் ரூ.6000 மற்றும் ரூ.8000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.