சென்னை, டிச. 19 - டாக்டர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்புக் கேட்க வேண்டும்; அல்லது பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதனொரு பகுதியாக தமிழ்நாட்டில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன போராட்டங்கள் நடைபெற்றன. ரயில் மறியல் நடைபெற்றதுடன், அமித் ஷா உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து, திமுக சார்பில் சென்னை, மதுரை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, தருமபுரி உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’ மரியாதையாக அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். ஜனநாயகத்தின் மீது பிரதமர் மோடிக்கு நம்பிக்கை இருந்தால் அமித் ஷாவை 6 மாதத்திற்காவது அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்’’ என கூறினார்.
மாநிலக் கல்லூரியில் எஸ்எப்ஐ ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து சென்னை மாநிலக் கல்லூரியில், இடதுசாரி மாணவர் அமைப்பான, இந்திய மாணவர் சங்கம் (SFI) தலைமையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்பூரில் விசிக ரயில் மறியல்
அமித் ஷாவைக் கண்டித்து, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், பெங்களூருவில் இருந்து சென்னை செல்லக்கூடிய லால்பாக் விரைவு ரயிலை மறித்தனர். அப்போது, ஏற்பட்ட தள்ளு - முள்ளுவுக்குப் பின், விசிக திருப்பத்தூர் வடக்கு மாவட்டச் செயலாளர் ஓம் பிரகாசம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
அண்ணா சாலையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு தலைமையில் அண்ணா சாலை தர்கா அருகில், அமித் ஷாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், அசன் மவுலானா, மாவட்டத் தலைவர்கள் சிவராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், முத்தழகன், அடையாறு துரை ஆகியோர் பங்கேற்றனர்.
புதுப்பட்டினத்தில் அமித் ஷா உருவபொம்மை எரிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் புரட்சி பாரதம் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பி அமித் ஷாவின் உருவ படத்தைக் கிழித்தும், காலால் மிதித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அமித் ஷாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது போலீசார் அவர்களை தடுத்து அப்புறப்படுத்தினர். சாலை மறியல் காரணமாக அரை மணி நேரத்திற்கு மேலாக கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.