சென்னை:
இரு மொழிக்கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கவேண்டும் என்றும் மத்திய பாஜக அரசுக்கு பணிந்து இந்தியை மறைமுகமாக ஆதரிக்கக்கூடாது என்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கடந்த 6 ஆண்டுகளாக - பிரதமர் மோடி தலைமையில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதல், ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்புக்கான களமாக தமிழ்நாட்டைமாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசு, அண்ணாவின் இருமொழிக் கொள்கைதான் ஆட்சி மொழிக் கொள்கை என்று கூறும் நிலையில், அதுவே ஹிந்தியில் வினா - விடையை நடத்த அனுமதிப்பதா? மருத்துவத் துறையில் ஹிந்தி இணைப்பை மத்திய அரசு அனுப்பினால், அதை அப்படியே ஏற்பதா? தமிழ்நாட்டின் கொள்கைப்படி மறு இணைப்பு தமிழில் இருக்கவேண்டாமா?மாநில அரசு - இரட்டை வேடம் போடுவது - வெண்டைக்காய், விளக்கெண்ணெய் வியாக்கியானம் கூறுவது, அதன்மீது மக்களுக்குள்ள எதிர்ப்பைத்தான் நாளும் அதிகரிக்கவே செய்யும்.
இந்த உணர்ச்சிபூர்வ பிரச்சனையில் 80 ஆண்டுகால வரலாற்றைக் கூட மறந்துவிட்டு, ஏனோதானே என்று ‘‘பாம்புக்குத் தலை, மீனுக்கு வால்’’ என்ற விலாங்கு அரசியல், பாசாங்கு அரசியல் செய்யக்கூடாது.மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு, ரயில்வேயிலும் மற்றும் பல முயற்சிகளும் தேவையற்ற கிளர்ச்சிகளுக்கு வழிவகுக்கும்; அந்த மத்திய அரசு, தமிழக அரசின் மாநிலக் கொள்கையை மதித்து நடந்து கொள்ளவேண்டும் என்று துணிவுடன் மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தவேண்டாமா?
எல்லாவற்றிற்கும் சலாம் போடுவது, இந்திக்கு நடை பாவாடை விரிப்பது - தமிழ்நாட்டின் அரசுக்கு நல்லதல்ல; மத்திய அரசின் ஹிந்தித் திணிப்பை தமிழ்நாடு அரசும் எதிர்த்து நிற்கவேண்டிய தருணம்
இது - கடமை வழுவாதீர்! வரலாற்றுப் பழியை சுமக்காதீர்!இவ்வாறு அவர் கூறியுள்ளார்,