50 கிராம் பொங்கல் 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறித்து பயணி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தென்னக ரயில்வே அதிர்ச்சியளிக்கும் பதில் அளித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ரயில் சேவை முடக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து தற்போது சேவை தொடங்கி உள்ள நிலையில் தொடர்ந்து ரயில்வே மீதான புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் திருச்சியிலிருந்து பிரதான வழித்தடத்தில் சென்னை எழும்பூருக்கு ஞாயிறன்று பல்லவன் ரயில் புறப்பட்டு சென்றது.
கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக ரயில் நிலைய வளாகத்தில் உள்ள உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. ரயிலுக்குள் பயணிகளுக்கு உணவு தயாரித்து வழங்கும் முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணிகளுக்கு துரித உணவு நொருக்கு தீனி டப்பாக்களில் அடைக்கப்பட்டுள்ள உணவுகளை ஐஆர்சிடிசி விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் ஞாயிறன்று மூத்த குடிமகன் ஒருவர் ரயில் பயணத்தின் போது ரூ. 80 கொடுத்து வாங்கிய பொங்கலின் எடை 50கிராம் அளவிற்கு வெந்நீருடன் கூடிய துரித வகை பொங்கலும் இருந்தது. அதில் 8 மாதத்திற்கு பொங்கல் கெட்டுப்போகாமல் இருக்கும் என்று அச்சிடப்பட்டிருந்தது. இதைத்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் ஐஆர்சிடிசி பணியாளர்களை அழைத்து இதுபோல குறைந்த அளவில் அதிக விலைக்கு தரமின்றி விற்கப்படும் துரித வகை உணவுகளை ரயில் விற்பதை தவிர்க்க வேண்டும். உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி விற்க வேண்டும் என்ற புகார் செய்து அதை வீடியோவாக பதிவிட்டு ரயில்வேக்கு புகார் அனுப்பினார். அந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டது.
இது குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அது துரித உணவாகும். அந்த கோப்பையை பிரித்து நுகர்வோர் அதில் சூடான தண்ணீரை ஊற்ற வேண்டும். சரியாக 8 நிமிடம் காத்திருந்தால் பொங்கல் 220 முதல் 230 கிராம் எடை கொண்டதாக இருக்கும் என பதில் அளித்துள்ளது.