tamilnadu

img

உறவுக்காரி

மங்கலக்குடி நா.கலையரசன்

சேகர் வீட்டுக்குள் பார்த்து குரல் கொடுத்தான் “வசந்தி எவ்வளவு நேரம் புறப்படுவே..நேரம் ஆக ஆக கூட்டம் சேந்துட்டா இன்னைக்கு பொழுது அங்கேயே போயிரும்.. சட்டுனு கிளம்புறியா... இல்லையா” கதறி கொண்டு இருந்தான். சேலை முந்தானையை சரி செய்தபடி வந்து நின்ற வசந்தியை ஏற்றிக்கொண்டு பைக் தெருவைக் கடந்து சாலைக்கு வந்தது “கடை திறந்து இருப்பாங்களா என்னன்னு தெரியலையே” முகத்தை திருப்பி வசந்தியை பார்த்தான் “ஏன் அதெல்லாம் திறந்துருப்பாங்க.  புறப்பட்டு வந்துட்டு அப்புறம் என்ன யோசனை” முதுகில் தட்டினாள். “அது இல்லலா.. ஒரு டீ க்கீ.. குடிச்சிட்டு போலாமான்னு தான்”இழுத்தான்” எப்ப பாரு டி.. டி... ன்னு அலையிறது. சுகர் வந்த பின்னாடியும் அந்த டீ பைத்தியம் மட்டும் உங்களுக்கு குறையவே மாட்டேங்குது. முதல்ல கடைக்கு போரோம் அப்புறம் வந்து டீ குடிப்போம்” விரட்டினாள். “நகையை திருப்பத்தானே போறோம். ஏன் பறக்குற.” எரிச்சலாக சொன்னதும், “உங்களுக்கு என்ன தெரியும் கடத்தெருவுல பார்த்து உங்க தங்கச்சி அழுதது இன்னும் என் கண்ணையும் காதையும் விட்டு போகல. அவளோட புருஷனும் மாமியாரும் அந்தபாடு படுத்துறாங்க அவளை” குரல் கம்ம அவள் பேசியது சேகரை சங்கடப்படுத்தியது. “நாம தான் நகையை திருப்பி தர்றமுண்ணு  சொல்லி யிருக்கோமே, அப்புறம் என்ன” சமாதானப்படுத்த முயன் றான். “திருப்பித்தர்றது வேற. ஆனா அவ நகையை நாம வாங்கி அடமானம் வச்சது நியாயமா சொல்லுங்க.” சேக ருக்கு அது சரியில்லை என்றே பட்டது என்றாலும் “நாம என்ன நமக்காகவா அடகு வச்சோம். பிரசவத்துக்கு வந்தவளுக்கு பிரசவம் பார்த்தோம்.

கொரோனா நேரம், வேலை வெட்டி இல்ல. அதனால செயினை வாங்கி அடகு வச்சு பிரசவ செலவு பார்த்தோம். ஆனாலும் அதை நாம திருப்பி தந்துருவோம்னு தானே சொன்னோம்.” அவளை திரும்பிப் பார்த்தான் “அதோட அந்த நகை என்ன நாம போட்ட நகை தானே” சொன்னவுடன் அவள் முகத்தை பார்த்தான். “என்ன பேச்சு இது? அவ கல்யாணத்துக்கு நாம போட்டது. இப்ப அது அவங்க நகை. நாம அடகு வைத்தி ருக்கக் கூடாது. சிரமத்துல வெச்சோம். அதை உடனே திருப்பி கொடுக்கிறது தான முறை. கொடுக்கலைன்னா கேட்கத்தானே செய்வாங்க. அது நம்ம பொண்ணுக்கு மரி யாதை இல்லை. அதை புரிஞ்சு பேசுங்க” அவள் சொன்னது நியாயமாகப்பட்டது அவனுக்கு. சரி சரி அதுதான் திருப்ப போறோம்ல்ல. கொண்டு போய் கொடுத்துட்டு வந்துரு. சரியா.. சரி.. இப்ப டீ “...என இழுத்தவன், அவள் முறைத் ததும், “சரி சரி வரும்போது குடிப்போம் சரிதானே.” அவன் சிரிக்க அவனோடு அவளும் சிரிக்க திடீரென பிரேக் போட்டு நின்றான். என்ன என்பது போல் அவள் பார்க்க, அந்த இடம் பரபரப் பாக இருந்தது. ரோட்டில் இருபுறமும் நின்ற மக்கள் ஓடிவந்து ரோட்டில் நடுவில் கூட... பதட்டமானது அந்த இடம். என்ன என விசாரித்தார்கள். “யாரோ ஒரு பெரிய ஒரு மயங்கி விழுந்துட்டார்” என்று ஒருவர் சொல்ல வேகமாக கூட்டத்தை விளக்கிக் கொண்டு நடுவில் சென்று பார்த்தார்கள். அங்கே ஒரு ட்ரை சைக்கிளில் ஒரு பெரியவர் மயங்கி சரிந்து கிடந்தார். உடல் எல்லாம் வேர்த்து நெஞ்சை பிடித்துக் கொண்டு கிடந்தார். கூடிய சனம் சோடா வாங்கி வந்து தெளித்தது. 108க்கு போன் செய்தது. பிறகு என்ன செய்வது என தெரியாமல் நிற்க, சேகரும் வசந்தியும் கூட்டத்திற்குள் நுழைந்து  பெரியவரை பார்க்க பார்க்க பதட்டம் வந்தது. அவர் வாய் உளற  துவங்கினார்.

 வசந்தி சாமி வந்தவளை போல “ஏங்க எல்லோரும் இப்படி வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி. 108 எப்ப வரது அவருக்கு நெஞ்சு வலி போல இருக்கு. ட்ரை சைக்கிள்ல பக்கத்துல இருக்குற ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகலாம்” என கதறினாள். சிலர் விலகிப் போனார்கள். சிலர் சேகருக்கு உதவினார்கள். பெரிய வரை ட்ரை சைக்கிள் ஏற்றி அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தார்கள் உடனடியாக சிகிச்சையை தொடங்கி யது. மருத்துவர் சிறிது நேரம் கழித்து வெளியில் வந்து “யார் அந்த பெரியவரோட உறவினர்” என்று கேட்டதும் கூடியிருந்த அனைவரும் வசந்தியை காட்டினார்கள். அவளும் சேகர்முகத்தை பார்த்து விட்டு டாக்டரிடம் வந்தாள். “நான் உறவு இல்ல சார். ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தது நான்தான். என்ன சார் சொல்லுங்க.” அவர் முகத்தை பதட்டத்துடன் பார்த்தாள்.” ஒண்ணும் இல்லை, அம்மா அவருக்கு பிளட் டெஸ்ட், இஜிசி, எக்கோ பாக்கணும். அதுக்கு பணம் கட்டணும் அதுக்கு பின்னால தான் சிகிச்சையே தொடர முடியும்.” மருத்துவர் சொன்னதை கேட்டதும் சேகரைப் பார்த்தாள். பிறகு “பணம் கட்டிடறேன் சார். நீங்க பாருங்க” செல்வத் துடன் சென்று பணத்தைக் கட்டி ரசீதை கொண்டு வந்து கொடுத் ததும் சிகிச்சை துவங்கியது. பெரியவரின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன், பெல்ட் என அவரு டைய பொருள்களை கொண்டு வந்து வசந்தியிடம் தந்தார் கள். இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தபடி வாங்கிக் கொண்டார்கள்.  சிறிது நேரம் கழித்ததும், அவர் யார் எந்த ஊர் என்று தெரிந்து கொள்ள அவர் சட்டை பாக்கெட்டை சோதனை செய்ய அதில் 150 ரூபாய் இருந்தது. சில பேப்பர்கள் இருந்தது.

அவரை தெரிந்து கொள்ளும் வகையில் எதுவும் இல்லை. பிறகு நர்ஸ் கொடுத்த உள்ளங்கைக்குள் அடங்கும் செல்போனை எடுத்து கால் ரிஜிஸ்டருக்கு போய் கடைசி யாக அவருக்கு வந்த போன் எண்ணுக்கு அழைத்தான் சேகர். “அத்தா.. சொல்லுங்க”.. என்றது எதிர்முனை குரல். உடனே குறுக்கிட்ட சேகர்.. “அம்மா நான் திருவாடானையில இருந்து குணசேகரன் பேசுறேன். உங்க அப்பாவோட போன் தான் இது. லேசா தல சுத்துதுன்னு சொன்னாரு. அவர ஹாஸ்பிடல் சேர்த்து வச்சிருக்கோம். நீங்க யாராவது வந்தா நல்லா இருக்கும்” என்றதும் பதறிப் போனது எதிர் குரல், “அல்லாவே இப்பதானே பேசிட்டு போன வச்சேன். அதுக்குள்ளேயே இப்படி ஆகிப்போச்சே.. ஐயா என் பேரு கதீஜா பேகம். எங்க அத்தா தான் அவரு. அவர் பேரு இஸ்மாயில். எங்க ஊரு கவலை வென்றான். நான் இப்போ சிறு கம்பையூர்ல இருக்கேன். உடனடியா எங்க அம்மாவுக்கு சொல்றேன். நானும் கிளம்புறேன். அதுவரைக்கும் கொஞ்சம் அத்தாவ பார்த்துக்கிருங்க” என்று இறைஞ்சுவது போல் பேசினாள்.  நீங்க ஒன்னும் பயப்படாதீங்கம்மா. நிதானமா புறப்பட்டு வாங்க. நீங்க வர்ற வரைக்கும் நா, ஹாஸ்பிடல்ல இருக் கேன். போனை கட் பண்ணியதும் வசந்தியை பார்த்தான். “கவலைவென்றான்னு சொன்னா மருதாந்த பக்கத்துல இருக்குற ஊரு. சிறு கம்பையூர்னா  வெள்ளையபுரம் பக்கத்துல இருக்கு. அவங்க வர கொஞ்சம் நேரம்தான்  ஆகும் வசந்தி, என்ன செய்வோம்” என்று கேட்டான். உடனே வசந்தி “நாம எப்படிங்க மத்தவங்க மாதிரி இப்படியே விட்டுட்டு போக முடியும். யாராவது ஒருத்தர் அவங்க குடும்பத்தில இருந்து வரட்டும். அப்புறம் போகலாம்... லீவு போட்டது போட்டுட்டோம் கொஞ்சம் இருந்துட்டு போவமே” என்றான். “சரி வா வெளில போய் ஒரு டீ குடிச்சிட்டு வரலாம்” என்று இருவரும் மருத்துவமனைக்கு வெளியில் இருந்த டீக்கடைக்கு வந்து டீ குடித்துவிட்டு மீண்டும் மருத்துவ மனை பெஞ்சில் வந்து அமர்ந்தார்கள். சேகர் வசந்தியின் முகத்தைப் பார்த்தான்.

புருவங்களை சுருக்கி அவள் எதையோ யோசிப்பதாக உணர்ந்தான். “என்னலா.. என்ன யோசிக்கிற” என்று அவள் தோளை தட்டி கேட்டான். “ஒன்னும் இல்லங்க. ஆறு மாசமா போராடி இப்போ தான் உங்க தங்கச்சி நகையை திருப்பலாம்னு  வந்தோம். அதுக்குள்ள இப்படி செலவாயிருச்சே. இந்த 3500 ரூபாய நாம எப்ப தயார் பண்றது” என்றாள். கவலை யாக பேசிய வசந்தியை பார்த்து “ஏலா.. அவங்க குடும்பத்திலிருந்து வர்றவங்க இந்த காசை  தந்திர மாட்டாங்களா.” அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று அவளையே பார்த்தான். “தந்திரக்கூட செய்யலாம் தான். ஆனா நாம இப்பவே வச்சுட்டு வேலையைப்பாருன்னு  சொல்ல முடியாதே, பாவம் அவங்க வசதியானவங்களோ இல்ல, நம்மள மாதிரி கஷ்டப்படுறவங்களோ, யாருக்கு தெரியும். வரட்டும் பார்ப்போம்” என்றாள்.  சேகருக்கும் இப்போது அந்த கவலை ஒட்டிக்கொண்டது. தங்கையின் நகையை திருப்புவதற்காக தனது பிள்ளைகள் ஆசைப்பட்டு கேட்டதை கூட தவிர்த்து விட்டு இந்த காசை சேர்த்து வைத்துத்தான் நகையை திருப்ப வந்தார்கள். இதற்கே ரெண்டு வருடத்திற்கு மேல் ஓடிவிட்டது. இப்போது இந்த 3500-ரூபாய் செலவை எப்படி சமா ளிப்பது யோசித்தபடியே வசந்தியை திரும்பி பார்த்தான். அவளும் எங்கேயோ வெறித்து பார்த்தபடி இருந்தாள். “ஏலா.. என்ன செய்யலாம்” என அவளிடமே கேட்டான். “என்ன செய்ரது நடக்கிறது நடக்கட்டும். இதயும் சமாளிப்போம். நமக்கு செலவு இருக்குங்கிறதுக்காக கையில காச வச்சிக்கிட்டு ஒரு உசுரு துடிக்கிறத எப்ப டிங்க பார்த்துட்டு இருக்க முடியும். ம்...ரெண்டு வருஷம் பொறுத்தவங்க ரெண்டு மூணு மாசம் பொறுக்க மாட்டாங்களாப் பாப்போம்” என்று பெருமூச்சு விட்டாள்.

நகையை எப்படி திருப்பிக் கொடுக்கப் போகிறோம். அதுவரை எப்படி சமாளிக்க போகிறோம் என எதையெதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். நேரம் போய்க் கொண்டே இருந்தது. வேகமாக ஒரு ஆட்டோ வந்து மருத்துவமனை வாசலில் நின்றது. இரண்டு பெண்கள் பதறியபடி உள்ளே ஓடி வந்து அங்கிருந்த மருத்துவமனை ஊழியரிடம் விசாரித்தார்கள். பார்க்க வசதி இல்லாதவர்களைப் போல் தான் இருந்தார்கள். அந்த ஊழியர் சேகரையும் வசந்தியையும் கைகாட்டி னார்கள். அவர்கள் நேரடியாக இவர்களிடம் வந்து சேர்ந் தார்கள். “அண்ணே நீங்க தான் போன் பண்ணீங்களா. நான் அவரோட பொண்ணு இது எங்க அம்மா. அத்தா, எங்கே அண்ணா இருக்காரு” என்று வழியும் கண்ணீ ரோடு கேட்டாள் அந்த பெண். “ஒன்னும் இல்லம்மா, அப்பா நல்லா இருக்காரு ஐசியூவில தான் வச்சிருக்கிறாங்க. பதட்டப்படாமல் வாங்க பார்ப்போம்” என்று  இருவரையும் அழைத்துக்கொண்டு ஐசியூ இருக்கும் இடத்திற்கு சென்றார்கள். கண்ணாடி வழியேதான் உள்ளே படுத்து இருந்த அவரை பார்க்க முடிந்தது. அவர் அமைதியாக தூங்கிக் கொண்டிருப்பதாக நர்ஸ் ஒருத்தி வேகமாக வெளியே வந்து சொன்னாள். “ஒன்னும் இல்ல சார் இப்போ நல்லா இருக்காரு. கவலைப்படரதுக்கு ஒன்னுமில்லை. நீங்க டாக்டர் வந்ததும் அவரோட பேசுங்க” என்றாள். “அவரப் போய் பார்க்கலாமா” என்று அவரின் மனைவி பதர்நிஷா கேட்க, உடனே அந்த நர்ஸ் “அம்மா டாக்டர் வந்து பேசி அவர் பாக்கச் சொன்னா அப்புறம் நீங்க பார்க்கலாம்” என்றதும் அருகே கிடந்த பெஞ்சில் அமர்ந்து அழுத் தொடங்கினாள் அந்த அம்மா. அவளுக்கு ஆறுதல் சொல்லியபடி அவருடைய மகள் அவரைத் தேற்றிக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் மருத்துவர் வந்து ஐசியூவிற்குள் நுழைய முயல்வதற்கு முன்பு, “நீங்க” என்று அவர்களைப் பார்த்து கைகாட்டி சேகரைப் பார்த்தார். “அவங்க தான் அவரோட மனைவி  மகள்” என்று விவரம் சொன்னான் சேகர். “அப்படியா, சரி அம்மா.

அவருக்கு வந்தது மயில்டா ஒரு அட்டாக் தான். நல்ல சமயத்தில் கொண்டு வந்து ஹாஸ் பிடல்ல சேர்த்திட்டாங்க. இப்ப அவர் நல்லா இருக்காரு. அவருக்கு ஆஞ்சியோ பண்ணி பார்த்தா நல்லது. என்ன செய்யலாம்னு நீங்களே சொல்லுங்க” என்று சொல்லி விட்டு அவர் ஐசியூவிற்குள் நுழைந்தார். அந்த அம்மா பதறிப் போய்விட்டார். “என்னம்மா டாக்டர் இப்படி சொல்றாரு. உன் மாப்பிள்ளைய உடனே வர சொல்லு, ஐயோ என்ன ஆகும்னு தெரியலையே. நான் என்ன செய்வேன்” என்று புலம்பியபடி இருந்த அந்த அம்மாவை வசந்தி தோள்களை தடவியவாறு, “அம்மா அவருக்கு ஒன்னும் இல்ல. அடப்பு எதுவும் இருக்கான்னு ஆஞ்சியோ பண்ணி பார்ப்போம்னு தான் கேட்குறாங்க. நாம விரும்பினால் பார்க்கலாம். இல்லைன்னா, மெடிசன்லையே சரி பண்ண லாம்னா அதைச் செய்ய சொல்லலாம். நாம சொல்றது தானேம்மா. எதுக்கும் உங்க வீட்டு ஆம்பளைங்கட்ட போன் பண்ணி வர சொல்லுங்க” என்று வசந்தி அவர்களுக்கு ஆறுதல் சொன்னாள். அவள் பேச பேச அவள் முகத்தையே பார்த்துக் கொண்டி ருந்த அந்த அம்மா “சரியான நேரத்தில் கொண்டு வந்து சேர்த்திருக்கேம்மா. உன்னை அந்த அல்லாஹ் தான் அனுப்பி வச்சிருக்கான். நீ நல்லா இருக்கணும்” என்று வசந்தியின் கைகளை பிடித்துக் கொண்டு அழுதாள். “என்னம்மா இப்படி சொல்றீங்க, அவர் எனக்கும் அப்பா மாதிரி தானே. அதெல்லாம் ஒன்னும் ஆகாதுமா. நீங்க தைரியமா இருங்க” என்று பேசிக் கொண்டிருந்தபோது, வேகமாக ஒருவர் உள்ளே வந்து அருகில் நின்ற அந்த இளம் பெண்ணிடம் “என்ன ஆச்சு கதீஜா” என்றபடி சேகர் வசந்தியை பார்த்தான். “இவங்க தான் அத்தாவ ஹாஸ்பிடல்ல சேர்த்தவங்க இவரு என்னோட வீட்டுக்காரர்  சிக்கந்தர்” என அறிமுகம் செய்து வைத்தாள் கதிஜா. எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். மருத்துவர் அழைப்பதாக நர்ஸ் வந்து சொன்னதும் எல்லோரும் மருத்துவர் அருகே சென்றார்கள்.  

முன்னாள் கிடந்த இருக்கைகளில் அமர வைத்த மருத்துவர், “உக்கா ருங்க. அவருக்கு இப்போதைக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. மைல்டா ஒரு அட்டாக் வந்திருக்கு. சரியான சமயத்தில் கொண்டு வந்து ஹாஸ்பிடல்ல சேர்த்ததுனால அவர காப்பாத்தியாச்சு. ஆனா எதுவும் அடைப்பு இருக்குமோ என்கிற சந்தேகம் இருக்கு. அதனால ஒரு ஆஞ்சியோ பண்ணி பாத்துக்கிட்டா, பர்தரா ட்ரீட்மெண்ட் எடுப்பதற்கு ஈசியா இருக்கும். அப்படி இல்லைன்னு சொன்னா, ஹார்ட்ட பலப்படுத்துவதற்கும் அடைப்பு இருந்தா சரி பண்றதுக்கு மான மாத்திரை மருந்துகளோடு கொஞ்சம் சமாளிக்கலாம். கடினமான வேலை பாக்காம அவரு கொஞ்சம் ஓய்வுல இருக்கணும். அப்படின்னா, ரெண்டுல ஏதாவது ஒன்னு. நீங்க சொல்றதுல இருந்து நாம வைத்தியத்தை தொடர லாம்.” அவர்கள் அனைவரையும் மாறி மாறி பார்த்தபடி பேசி னார். உடனே சிக்கந்தர், சேகரை பார்க்க சேகர் “சரி சார் நாங்க கலந்து பேசிட்டு சொல்றோம்” என்று பேசிவிட்டு வெளியில் வந்தார்கள். வெளியே வந்ததும் சிக்கந்தர் சேகரிடம் “என்ன செய்வோம் ப்ரோ.. சொல்லுங்க” என்றார். அதை “நீங்க தானே சார் முடிவு பண்ணனும். நீங்க யோசிச்சு அம்மா கிட்ட கதீஜா கிட்ட எல்லாம் பேசிட்டு ஒரு முடிவுக்கு வாங்க” என்று சொல்ல, “இல்ல ப்ரோ.. எங்களுக்கு நீங்க செஞ்சது பெரிய உதவி. இந்த குடும்பத்தில் நீங்களும்.. என்ன மாதிரி தான். சொல்லுங்க எப்படி செஞ்சுக்கலாம்” என்று கேட்டான். “நம்மள பொறுத்த வரைக்கும் அவரை காப்பாத்திட் டோம். கொஞ்சம் கடினமான வேலை செய்யாமல் ..லகுவா..  வேலைய பாத்துட்டு இந்த மாத்திரை மருந்துகளை கண்டினியூ பண்ணட்டும். சாப்பாட்டு விஷயத்தையும் கொஞ்சம் சரி பண்ணிக்கட்டும். அதுக்கு பின்னாடி அவ ருக்கு பிரச்சனையா.. இருக்குன்னா அப்புறம் ஆஞ்சியோ பண்றத பிறகு பாத்துக்கலாம்னு எனக்குப் படுது” என்று சொன்னான் சேகர். “சரி ப்ரோ நானும் பேசிகிட்டு என்ன செய்யலாம்னு பார்க்கிறேன்” சிக்கந்தர் சொன்னதும், “சரி சிக்கந்தர் நீங்க பாத்துக்கோங்க. நாங்க இன்னொரு வேலையா வந்தோம், வரும்போது தான் இப்படி நடந்து ருச்சு. அதனால நின்னுட்டோம். புள்ளைங்க மத்தியானம் சாப்பிட வந்துடும்.

அவங்களுக்கு ஏதாவது ஹோட்டல் தான் சாப்பாடு வாங்கிட்டு போகணும். மறுபடி நான்வந்து பாக்கு றேன். இது தான் என்னோட போன் நம்பர்” என தனது போன் நம்பரை கொடுத்து விட்டு புறப்பட தயாரானார்கள். அப்போது “சிக்கந்தர் ப்ரோ.. நீங்க எவ்வளவு பணம் கட்டி இருக்கீங்க, என்னன்னு எனக்கு தெரியல நான் விசாரிச்சுக்குறேன். உங்க பணத்தை நாங்க கொடுத்து றோம். உடனே தருவது கொஞ்சம் சிரமம். ஆனா நான் எப்படியாவது தயார் பண்ணி கொடுத்துடறேன்” என்று பேச, உடனே வசந்தி “தம்பி நீங்க முதல்ல மத்த செலவு களை பாருங்க, வீட்டுக்கு போனதுக்கு பின்னாடி மத்தத யோசிக்கலாம்” என்று பேச்சை முடித்து அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியில் வந்தார்கள். அப்போது எதிரே வந்த நர்ஸ் “என்னக்கா அவங்க சொந்தக்காரங்க வந்துட்டாங்களா” என்று கேட்டாள். “ஆமா சிஸ்டர் இப்பதான் வந்தாங்க. அதான் பேசிட்டு கிளம்பு றோம்” என்றதும் “நீங்க கட்டின பணத்தை எல்லாம் வாங் கிட்டீங்களா அக்கா” என்றதும் “அதுக்கு என்ன இப்ப அவசரம். முதல்ல ஆஸ்பத்திரியில மத்த செலவுகளை பாருங்க. என்னோட பணத்த பத்தி பின்னால பாத்துக்க ளாம்னு சொல்லிட்டு வந்துட்டேன்” என்ற அவளை ஆச்சரிய மாக பார்த்த நர்ஸ்” உங்கள பார்த்தா எனக்கு பெருமையா இருக்குக்கா. அவங்க சொந்தமோ உறவோ  இல்லாத நீங்க, இப்படி ஆஸ்பத்திரியில கொண்டு வந்து சேர்த்து செலவு செய்றீங்கன்னா எவ்வளவு பெரிய விஷயம். உங்களுக்கு பெரிய மனசுக்கா. நீங்க நல்லா இருப்பீங்க” வசந்தி சிரித்துக் கொண்டே வெளியேறினாள்.