tamilnadu

முன்னாள் அமைச்சர் பொன்முடி மகனின் ரூ. 8.60 கோடி சொத்து முடக்கம்

சென்னை:
வெளிநாடுகளில், சட்ட விரோதமாக முதலீடு செய்து, பல கோடி ரூபாய் சம்பாதித்து, அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக தி.மு.க., - எம்.பி., கவுதம சிகாமணியின், 8.60 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கினர்.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி; கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.,யாக உள்ளார்.இவர், 2008 ஆம் ஆண்டில், இந்தோனேஷியா நாட்டின் தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள, ‘பிடி எக்சல் மெகிண்டோ’ என்ற நிறுவனத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறாமல், சட்ட விரோதமாக, 1 லட்சம் அமெரிக்க டாலர்; அப்போதைய இந்திய மதிப்பில், 41.57 லட்சம் ரூபாய்க்கு, 2.45 லட்சம் பங்குகளை வாங்கி, முதலீடு செய்துள்ளார்.அதேபோல, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள நிறுவனம் ஒன்றில், 55 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு, அப்போதைய இந்திய மதிப்பில், 21.86 லட்சம் ரூபாய்க்கு முதலீடு செய்து உள்ளார். இதன் வாயிலாக, பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.இது குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ், தமிழகத்தில், கவுதம சிகாமணிக்கு சொந்தமான விவசாய நிலம், வணிக வளாகம் என, 8.60 கோடி ரூபாய் மதிப்புள்ள, அசையா சொத்துக்களை முடக்கினர்.